100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக மாற்றுவோம்: திருநாவுக்கரசர்
முதுகுளத்தூர் தொகுதியில் வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சு.திருநாவுக்கரசர் வாக்குகள் சேகரித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியான செல்லூரில் தொடங்கி திருவரங்கம், அலங்கானூர், பூசேரி உள்ளிட்ட 30 கிராமங்களில் வாக்குகள் சேகரித்து அவர் பேசியதாவது: நான் ஆறு முறை தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளேன், ஒருமுறை நின்று மக்களுக்கு நல்லது செய்யவில்லை என்றால் அடுத்தமுறை மக்கள் எனக்கு வாக்களிப்பார்களா, எம்.பி தேர்தலை பொறுத்தவரை தில்லியில் காங்கிரஸ் ஆட்சி செய்கிறது. திமுகவோ, அல்லது அதிமுகவோ,வெற்றி பெற்றால் மக்களுக்கு பயன் இல்லை. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கிராமங்களில் நடைபெறும் 100 நாள் வேலை வாய்ப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால் காங்கிரஸ் வெற்றிபெற்றால் 100நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 200 நாள் வேலை வாய்ப்பு திட்டமாக மாற்றுவோம் என கூறி வாக்குகள் சேகரித்தார்.
அவருடன் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ஆர்.ரவிச்சந்திர ராமவன்னி, மாநில துணைத் தலைவர் எஸ்.மலேசியா பாண்டியன், மாவட்ட துணைத் தலைவர் சோ.பா.ரெங்கநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தாமரைக் கண்ணன், மாவட்ட துணைத் தலைவர் (தெற்கு) சோ.பா.ரவி, மாவட்ட துணைத் தலைவர் எம்.முத்துச்சாமி, முன்னாள் நகர தலைவர் மாஸ்டர் சண்முகம், கிழக்கு வட்டார தலைவர் கோட்டைமுத்து, மேற்கு வட்டார தலைவர் ஏ.சந்திரபோஸ், நகர் இளைஞர் காங்கிரஸ் வீ.நேருசிவக்குமார் உள்பட காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.