விவசாயக்கடன் பெற ஆர்வமில்லை முதுகுளத்தூர் “லோன் மேளா வெறிச்’
முதுகுளத்தூர் :முதுகுளத்தூர் சுற்றுப்பகுதியில் நடந்த “லோன் மேளா’வில், குறைந்தளவே விவசாயிகள் வந்திருந்தனர்.கடந்த 2012 “மெகா லோன் மேளா’வில், கடன் வழங்கபடும் என, வங்கிகளின் அறிவிப்பு, அதோடு நின்றுபோனது. இந்தாண்டு ஒரு ஏக்கர் நெல் விவசாயத்திற்கு 12 ஆயிரத்து 500, பருத்திக்கு 14 ஆயிரம், மிளகாய்க்கு 12 ஆயிரத்து 200 ரூபாய் கடன் வழங்கபடும் என, வங்கி நிர்வாகங்கள் அறிவித்தன.
தேரிருவேலி, காக்கூர் அரசு, தனியார் பள்ளிகளில், ஸ்டேட், பாண்டியன், இந்தியன் ஓவர்சீஸ், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிகள் “லோன் மேளா’ நடத்தின. குறைந்தளவே விவசாயிகள் வந்திருந்தனர்.
அ.பழங்குளம் விவசாயி தர்மராஜ் கூறும்போது: கடந்தாண்டு நடந்த “லோன் மேளா’ வில், முகாம் நாளன்று விவசாய சான்றுகள் வழங்கபட்டபோது, குறிப்பிட்ட தொகை, வங்கிகள் மூலமாக கடன் வழங்கபடும் என, வங்கி நிர்வாகங்கள் எழுத்து மூலமாக தெரிவித்தும், கடன் வழங்கவில்லை. இந்தாண்டு விவசாயம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், கடன் வழங்குவார்களா என்ற சந்தேகத்திலும், மனு கொடுத்துள்ளேன், என்றார்.
முதுகுளத்தூர் விவசாயி பாசில் அமீன் கூறுகையில்,
“”கடந்தாண்டு வங்கிகள், விவசாயிகளை அலைக்கழிப்பு செய்ததன் எதிரொலி தான் இப்போது அதிகம் பேர் வராததற்கு காரணம். முறையான ஆவணங்கள் இருந்தும், கடன் வழங்க வங்கி நிர்வாகங்கள் மறுத்து வருகின்றன,” என்றார்.
வங்கி அதிகாரிகள் சிலர் கூறுகையில், “”2012 ல், நேரடி பட்டாதாரர்களைவிட உழவு செய்தவர்களே அதிகம் விண்ணப்பித்தனர். கடன் வழங்குவதில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டது. ஆனால் இந்தாண்டு நடந்த முகாம்களில், நேரடி பட்டா உள்ள விவசாயிகள் மட்டுமே, கடன் பெறமுடியும் என்ற அறிவிப்பால், விவசாயிகள் வருகை குறைந்துள்ளது,” என்றார்.