ரோடு மராமத்து பணியால் குழாய் சேதம் 6 மாதங்களாக குடிநீர் இன்றி தவிப்பு
முதுகுளத்தூர் : ரோடு மராமத்து பணியால், முதுகுளத்தூர் அருகே காக்கூர், புளியங்குடி உட்பட எட்டு கிராமங்களில், காவிரி குடிநீர் சப்ளை ஆறு மாதமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன், சேதமடைந்த பரமக்குடி- கீரந்தை ரோட்டில் மராமத்து பணிகள் நடந்தது. காக்கூர், புளியங்குடி, ஆதனக்குறிச்சி, காமராஜர், இந்திரா, தேவர் நகர், கதையன், ராமலிங்கபுரம் ஆகிய கிராமங்களுக்கு, காவிரி குடிநீர் சப்ளை செய்வதற்கு, ரோட்டோரத்தில் அமைக்கப்பட்டிருந்த, காவிரி குடிநீர் குழாய்கள் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால், முதுகுளத்தூர்- தேரிருவேலி செல்லும் ரோட்டில் காக்கூர் சமத்துவபுரத்தில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கதொட்டியில் மக்கள் குடிநீர் சேகரித்து வருகின்றனர்.
தவிர, ராமலிங்கபுரம் மக்கள் 4 கி.மீ., தூரமுள்ள சமத்துவபுரத்திற்கு சென்று தள்ளுவண்டிகள் மூலம் குடிநீர் பிடித்து வருகின்றனர். ரோடு மராமத்து பணியால் காவிரி குடிநீர் குழாய்கள் அப்புறப்படுத்தப்பட்டு, ஆறு மாதங்களுக்கு மேலாக, காவிரி குடிநீர் சப்ளை ரத்து செய்யப்பட்டுள்ளதால் குடிநீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து காக்கூர் சேகர் கூறுகையில், “” பரமக்குடி- கீரந்தை ரோடு மராமத்து பணியில், காவிரி குடிநீர் குழாய் அடியோடு அப்புறப்படுத்தபட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாகியும் இன்னும் குழாய் பதிக்கப்படாததால் 8 கிராமங்களை சேர்ந்த மக்கள் குடிநீருக்கு திண்டாடி வருகின்றனர். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாயை சீரமைத்து தடையின்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார், என்றார்.
காவிரி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “” குழாய் சீரமைப்பு பணிக்கு பல லட்ச ரூபாய் செலவாகும் என்பதால், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில், புதிய குழாய்கள் அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்”, என்றார்.