முதுகுளத்தூர் வர்த்தக சங்க செயற்குழு கூட்டம்
முதுகுளத்தூர் நகர் வர்த்தக சங்க செயற்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வர்த்தக சங்கத் தலைவர் வி.கருப்புச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் எம்.செய்யது அப்தாஹிர், பொருளாளர் எஸ்.முத்துராமலிங்கம், துணைத் தலைவர் பி.ராமபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக மக்களுக்கு காவிரி நீர் வழங்காத கர்நாடக அரசைக் கண்டித்தும், உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை குறிப்பிட்ட தேதியில் அமைக்க கோரியும், உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றினர். கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கௌரவத் தலைவர் கே.எம்.காதர் முகைதீன் வரவேற்றார். முடிவில் தணிக்கையாளர் எம்.முகமது ஜியாவுதீன் நன்றி தெரிவித்தார்.