செல்லிஅம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்
முதுகுளத்தூரில் அருள்மிகு ஸ்ரீ வடக்கு வாசல் செல்லிஅம்மன் கோயில் புரட்டாசி மாத பொங்கல் விழாவில் புதன்கிழமை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
முதுகுளத்தூரில் காவல் தெய்வமாகத் திகழும் இக்கோயில் திருவிழாவில் சிறுவர், சிறுமியர் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள், வானவேடிக்கைள், வரலாற்று நாடகம், ஆன்மிக சொற்பொழிவு போன்றவை நடைபெற்றன.
புதன்கிழமை மறவர் தெருவில் உள்ள முளைக்கொட்டு திருணையில் இருந்து முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. சுப்பிரமணியர் கோயில் வழியாக செல்லி அம்மன் கோயிலுக்கு ஊர்வலம் சென்ற பின் சங்கரபாண்டி ஊருணியில் கரைத்தனர். பின் பக்தர்கள் பொங்கல் வைத்து, மொட்டையடித்து அம்மனுக்கு தங்களது நேர்த்தி கடன்களை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். இதில் சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மழை வேண்டி முளைப்பாரி: முதுகுளத்தூர் அருகே உள்ள செல்வநாயகபுரம் கிராம மக்கள் மழைவேண்டி செல்லி அம்மன் கோவிலுக்கு முளைப்பாரியை கொண்டு சென்றனர். பின்பு முளைப்பாரியை கோயிலில் வைத்து பெண்கள் கும்மி அடித்தும், ஆண்கள் ஒயிலாட்டமும் ஆடினர். முளைப்பாரியை முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச்சென்று சங்கரபாண்டி ஊருணியில் கரைத்தனர்.