முதுகுளத்தூர், கடலாடி, பகுதியில் மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை: டி.எஸ்.பி. எச்சரிக்கை
முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளினால் குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமில்லாமல் அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும் என முதுகுளத்தூர் டி.எஸ்.பி. நடராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் உள்ள மணல் குவாரி தொடர்பாக டி.எஸ்.பி. நடராஜன் கூறியதாவது: சில மணல் குவாரிகளில் அரசு விதிமுறைகளை மீறி மணல் அள்ளுகிறார்கள்.
மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கிய இடத்தில் மணல் கொண்டு செல்லாமல் எல்லைகளை தாண்டுவது, 3 அடிக்கு கீழ் மணல் அள்ளுவதால் நீர் வளம் குறைந்து விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் மாவட்டத்தில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது.
கண்மாய், குளங்கள், வீடுகளுக்கு அருகில் மணல் அள்ளிவருவதால் கிராமங்களுக்கு மழைக் காலத்தில் ஆபத்து நேரிட வாய்ப்பு உண்டு.
மேலும் குவாரியிலிருந்து இரவு நேரத்தில் மணல் அள்ளுவதற்கு உரிமம் வழங்குவது கிடையாது. டிராக்டர்களில் மணல் அள்ளி வருவதற்கு எப்போதுமே அனுமதி வழங்குவதில்லை. இதனால் விபத்துகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. இரவு நேரங்களில் மணல் அள்ளிக் கொண்டு வரும் லாரி, டிராக்டர்கள் போன்ற வாகனங்கள் மீதும், உரிமையாளர்கள் மீதும் அபராதம் விதிக்கப்படும்.
தற்சமயம் தேர்தல் நேரமாக இருப்பதால் அனைத்து குவாரிகளும் அரசின் விதிமுறைகளை பின்பற்றுமாறு குவாரி உரிமையாளர்களிடம் கூறியுள்ளதாக நிருபர்களிடம் டி.எஸ்.பி. நடராஜன் தெரிவித்தார்.