முதுகுளத்தூர் அருகே புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை
முதுகுளத்தூர் அருகே புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை அண்ணன், தம்பி கைது
முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகே புது மாப்பிள்ளை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர். முதுகுளத்தூர் அருகே மேலகன்னிசேரியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் கார்த்திகேயன்(27). இதே ஊரைச் சேர்ந்தவர் சசிவர்ணம் மகன் நிலாகரன்(22). இவரது குடும்பம் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறது. இதற்கு ஊராட்சி தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்ததாக தெரிகிறது. ‘பொதுத்தண்ணீரை ஏன் இப்படி பயன்படுத்துகிறீர்கள்’ என கார்த்திகேயன் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த நிலாகரன், அவரது சகோதரர் செந்தில் ஆகியோர், கார்த்திகேயனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். நேற்று அதிகாலை வீட்டின் அருகே தனியாக நடந்து வந்த, கார்த்திகேயனை அரிவாளால் சரிமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து பேரையூர் எஸ்ஐ செல்வமணி வழக்குப்பதிவு செய்து, சகோதரர்கள் நிலாகரன், செந்தில் ஆகியோரை கைது செய்தனர். வெட்டிக்கொல்லப்பட்ட கார்த்திகேயனுக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது.