முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில்இரவில் இருக்காத டாக்டர்கள்:அலைக்கழிக்கப்படும் நோயாளிகள்
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில், இரவில் டாக்டர்கள் இல்லாததால், நர்சுகளின் உதவியால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையில் 11 டாக்டர்களுக்கு பதில், மூன்று டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இரவில் இருப்பதில்லை. 19 நர்சுகளுக்கு பதில் 13ம், நான்கு துப்புரவு பணியாளர்களில் ஒருவர் மட்டுமே உள்ளனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும், மருத்துவமனையை சுத்தமாக வைத்திருப்பதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இரவில் அவசர சிகிச்சை பெற வருவோருக்கு, நர்சுகளே சிகிச்சை அளிக்கின்றனர். ஆதனக்குறிச்சி ராமலிங்கம் கூறுகையில், “”மேல் சிகிச்சைக்கு ராமநாதபுரம், மதுரை உட்பட பல பகுதிகளுக்கு செல்லும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கூடுதல் செலவும், அலைச்சலும் தாங்கமுடியவில்லை,” என்றார்.
மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறுகையில், “”தங்குவதற்கும், டாக்டர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கும் போதிய வசதிகள் இல்லை. நியமிக்கபட்ட சில மாதங்களிலேயே, கட்டாய பணி மாறுதல் பெற்று சென்றுவிடுகின்றனர். அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்பட்ட சில ஆண்டுகளுக்கு கட்டாயம் பணியில் இருக்கவேண்டும் என, அரசு உத்தரவிட்டால் மட்டுமே, இந்நிலை மாறும். நோயாளிகளுக்கு முழுநேர சிகிச்சை அளிக்கமுடியும்,” என்றார்.