முதுகுளத்தூரில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
முதுகுளத்தூரில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். பேரணியை வட்டாட்சியர் எஸ்.மோகன் தலைமை வகித்து, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து செல்லி அம்மன் கோயில் வழியாக அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் சென்று பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பேரணி முடிவு பெற்றது.
சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் என்.லீலாவதி,பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.ராஜாராம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.குருநாதன், கவுன்சிலர் சீனிமுகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் முகமது சுலைமான் வரவேற்றார்.
வாக்காளர் விழிப்புணர்வு பேரணி குறித்து மாணவ,மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி,ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜே.ஞானதாஸ்,சோணைமீனாள் கல்லூரி முதல்வர் எஸ்.கோவிந்தராஜ்,அரசு கல்லூரி முதல்வர் முரளிஜி, உதவி தொடக்க கல்வி அலுவலர் ஐ.சூசைதாஸ், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆர்.ஜான்சன் சுகுமார் தேவநேசன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். நிகழ்ச்சியினை என்.எஸ்.எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.துரைப்பாண்டியன் செய்திருந்தார்.
முடிவில் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் பி.முத்துக்குமார் நன்றி கூறினார்.