முதுகுளத்தூரில் போலீஸ்காரரை தாக்கிய இளைஞர் கைது
முதுகுளத்தூரில் போலீஸ்காரரைத் தாக்கியதாக இளைஞர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலையம் முன்பு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முதுகுளத்தூர் மொச்சிகுளத்தார் தெருவைச்சேர்ந்த சிந்தா சேக் மகன் செய்யது அபுதாஹிர் (31) இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
அந்த வாகனத்தை போலீஸார் சோதனையிட தடுத்து நிறுத்த முயன்றனர்.ஆனால் செய்யதுஅபுதாஹிர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாகத் தெரிகிறது. இதையடுத்து முதுகுளத்தூர் காவல்நிலையத்திற்கு கீழத்தூவல் போலீஸார் தகவல் தெரிவித்து வாகனத்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர். அங்கு போலீஸார் தடுத்த போதும் அவர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
இந்நிலையில், பேருந்து நிலையம் அருகில் போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸாரிடம் வாக்கு வாதம் செய்து போலீஸ்காரர் சாலிக்கை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த சாலிக் கொடுத்த புகாரின் பேரில், செய்யது அபுதாஹிர் மீது அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், தகாதவாறு பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.