முதுகுளத்தூரில் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது
முதுகுளத்தூர் வட்டம், தேரிருவேலியிலும்,இளஞ்செம்பூரிலும் தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
தேரிருவேலி காவல்நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர் திருமூர்த்தி. இவர், அந்த காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தேரிருவேலி அருகே பெரியஇலைக்காலனியில் வசிக்கும் சூரசிங்கம் (39) என்பவர் மது அருந்திவிட்டு பொதுஇடத்தில் தகராறு செய்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில் தேரிருவேலி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் சூரசிங்கத்தை கைது செய்தார்.
முதுகுளத்தூரில் அரசுப் பேருந்தில் நடத்துநராக பணி செய்து வருபவர் சின்னமருது (45). இவர், பேருந்தில் வந்த பயணியான ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே வேதாளை பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் தினேஷ் (24) என்பவர் மது அருந்திவிட்டு தன்னிடம் தகராறு செய்ததாக இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் தினேஷை காவல் நிலைய ஆய்வாளர் மோகன் கைது செய்து விசாரித்து வருகிறார்.