முதுகுளத்தூரில் அறிவியல் கண்காட்சி
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொடக்கக் கல்வி சார்பாக புதன்கிழமை ஒன்றிய அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சிக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் முத்துச்சாமி தலைமை தாங்கினார். தொடக்கக் கல்வி அலுவலர் துரைராஜ், முதுகுளத்தூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் வசந்த பாரதி, ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகுளத்தூர் வட்டார அளவிலான கண்காட்சியில் 16 நடுநிலைப் பள்ளியில் இருந்து 42 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் காளிமுத்து வரவேற்றார். இதில் பெருங்கருணை பள்ளி மாணவர் எம். சரவணன் முதல் பரிசும், ஆனைசேரி பள்ளி மாணவி ஏ.ராஜேஸ்வரி இரண்டாம் பரிசும், எஸ்.ஆர்.என். பழங்குளம் பள்ளி மாணவர் எம். கோகுல கண்ணன் மூன்றாம் பரிசும் பெற்றனர். அறிவியல் கண்காட்சின்போது ஆசிரிய பயிற்றுநர்கள் தினகரன், எஃப்ரோம், அலிமாபேகம், ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியை க.ஜோசப் விக்டோரியா ராணி செய்திருந்தார். முடிவில் ஆசிரியை எம். உமாதேவி நன்றி தெரிவித்தார்.