மருந்து கடை தொழிலாளி கொலை: மேலும் மூவர் கைது
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மருந்துகடை தொழிலாளி கொலையில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
முதுகுளத்துார் அருகே வெண்ணீர்வாய்க்காலை சேர்ந்தவர் சிவக்குமார், 37. முதுகுளத்துாரில் தனியார் மருந்து கடையில் வேலை செய்தார். அக்.,13 ல் வேலை முடித்து தனது சொந்த ஊரான வெண்ணீர்வாய்க்காலுக்கு டூவீலரில் சென்ற போது காரில் பின் தொடர்ந்த கும்பல் அவரை கொலை செய்தது. சிவக்குமாரின் அலைபேசியை முதுகுளத்துார் போலீசார் ஆய்வு செய்ததில் கீழத்துாவலை சேர்ந்த லட்சுமணன் தலைமையில் 5 பேர் கொலை செய்தது தெரிய வந்தது.
முதுகுளத்துார் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் கீழத்துாவலை சேர்ந்த லட்சுமணன், 30, முத்துராமலிங்கம், 28, ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
தலைமறைவான மகிண்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன்கள் லட்சுமணன், 25, ராமர், 21, திருப்புவனத்தை சேர்ந்த மோகன்ராஜ் மகன் மணிகண்டன், 23, ஆகிய மூன்று பேரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.
லட்சுமணன், மணிகண்டன், ராமர் ஆகிய 3 பேரும் திருச்சியில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. கொலைக்கு பயன்படுத்திய மணிகண்டன் அக்காள் பானுப்பிரியாவின் காரும் பறிமுதல் செய்யப்பட்டது.