பஸ் போக்குவரத்து காணாத கிராமங்கள்
முதுகுளத்தூர்: விஞ்ஞான வளர்ச்சி விண்ணை தொட்டபோதிலும், இன்றும் பஸ் போக்குவரத்து இல்லாமல், அத்தியாவசிய தேவைகளுக்காக 5 கி.மீ., நடந்து செல்லும் பரிதாபம் முதுகுளத்தூர் பகுதியில் உள்ளது. முதுகுளத்தூர் அருகே மேலச்சாக்குளம், மேலமானாங்கரை, துளுக்கன்குறிச்சி, பொந்தம்புளி, மொ.கடம்பன்குளம், வாத்தியனேந்தல், பனையடியேந்தல், கர்நாடன் ஆகிய கிராமங்களுக்கு இதுவரை பஸ் வசதி இல்லை.மேலச்சாக்குளம், துளுக்கன்குறிச்சியில் இருந்து 12 கி.மீ., மேலமானாங்கரை, பொந்தம்புளியில் இருந்து 10 கி.மீ., மொ.கடம்பன்குளத்தில் இருந்து 4 கி.மீ., தூரமுள்ள முதுகுளத்தூருக்குஅத்தியாவசிய பொருட்கள் வாங்க நடந்தே வருகின்றனர்.
வாத்தியனேந்தல், பனையடியேந்தல், கர்நாடன் ஆகிய கிராமங்களிலிருந்து 5 கி.மீ., தூரமுள்ள திருவரங்கம் அல்லது செல்லூர் விலக்கு ரோடு வரை நடந்து, அங்கிருந்து பஸ்சில், முதுகுளத்தூர் அல்லது பரமக்குடிக்கு செல்லும் அவலம் தொடர்கிறது. மக்களின் குமுறல்: காசிநாதன்(வாத்தியனேந்தல்): வயதானோர் மற்றும் நோயாளிகளை அழைத்து செல்வதில் சிக்கல் நீடிக்கிறது. அவசரத்திற்கு வெளியூர் செல்ல முடியாமல் தவிக்கிறோம். பஸ் விடக்கோரி போக்குவரத்து கழக அதிகாரிகள் உட்பட, பலரிடம் பலமுறை மனு கொடுத்தும் பயனில்லை.பிரியா(வாத்தியனேந்தல்): கடந்த சில மாதங்களுக்கு முன், வெளியூர் சென்று விட்டு இரவில் வாத்தியனேந்தலுக்கு நடந்து வந்த மூதாட்டியிடம், நகையை பறித்த கும்பல், அவரை தாக்கி விட்டு தப்பி ஓடியது. இதனால் உயிருக்கு பயந்து, தனியாக வெளியூர்களுக்கு செல்வதை தவிர்த்து வருகிறோம்.
பகலில் செல்வதாக இருந்தால் கூட, கூட்டமாகவே செல்கிறோம்.கவிதா(பனையடியேந்தல்): மாணவர்கள் உயர் கல்வி பெறுவதற்காக மட்டுமாவது காலை, மாலை நேரங்களில் அரசு பஸ் இயக்க, பலரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. லோக்சபா தேர்தலில் ஓட்டு கேட்க வரும் மக்கள் பிரதிநிதிகளை, ஊருக்குள் விட மாட்டோம்,” என்றார். போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், “”பஸ் விடக்கோரி யாரும் மனு கொடுக்கவில்லை. கொடுத்தால், பஸ் விடப்படும்,” என்றார்.