பள்ளிக்கு 10 கி.மீ., வயல் வழி பயணம் படிப்பை பாதியில் நிறுத்தும் அவலம்
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே பொந்தம்புளி மாணவர்கள், வயல் வழியாக 10 கி.மீ., தூரம் நடந்து பள்ளிக்கு சென்று திரும்பும் அவலத்தால், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, படிப்பை பாதியில் நிறுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொந்தம்புளியில் இருந்து 80க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், கூலி மற்றும் பிற வேலைகளுக்கு, 200க்கும் மேற்பட்டவர்கள், தினமும் முதுகுளத்தூர் சென்று வருகின்றனர். பொந்தம்புளியில் தனியார் துவக்கபள்ளி மட்டுமே <உள்ளதால், மேல்நிலைக்கல்விக்காக, முதுகுளத்தூர், பேரையூர் அரசு, தனியார் பள்ளிகளுக்கு செல்லும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு செல்ல, 10 கி.மீ., தூரம் சித்திரங்குடி கண்மாய் கரை, எட்டிசேரி, மு.தூரி ஆகிய கிராமங்களின் வயல்வெளிகளில் நடந்து செல்கின்றனர். சோர்வடைந்து, திறன் வளர்ப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
பள்ளி முடிந்து, “டியூஷனுக்கு’ சென்றால், இரவில் வயல் வழியாக வீடு திரும்ப வேண்டி இருப்பதால், பலருக்கு “டியூஷன்’ எட்டாக்கனியாகவே இருக்கிறது.
மழை, பனி காலங்களில், வயல்வெளிகள், வரப்பு ஓரங்களில் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், சில மாணவர்கள் விடுதிகளிலும், உறவினர்கள் வீடுகளிலும் தங்கி, வாரத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்கின்றனர். மேலும், பாதுகாப்பில்லாததால், பெண் குழந்தைகள் மேல்நிலைகல்வி படிக்காமல், படிப்பை பாதியில் கைவிடும் அவலம் ஏற்பட்டுள்ளது.
பொந்தம்புளி மாணவர்கள் கூறுகையில், “”ரோடு, போக்குவரத்து வசதிகள் இல்லை.
வயல் வரப்புகளில், உயிரை பணயம் வைத்து, நடந்து சென்று, பஸ் பிடித்து, முதுகுளத்தூர், பேரையூரில் படித்து வருகிறோம். ரோடு வசதியை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஏற்படுத்தி கொடுக்கவில்லை. 66 ஆண்டு ரோடு கனவு, எப்போது நனவாகமோ தெரியவில்லை,” என்றனர்.
உள்ளாட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், “”விரைவில் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.