பரமக்குடி புதிய ரயில்வே மேம்பாலம்: அமைச்சர் ஆய்வு
பரமக்குடி -முதுகுளத்தூர் சாலையில் ரூ. 37.50 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை இம்மாதம் இறுதிக்குள் திறப்பதற்கான ஆயத்தப்பணிகளை இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
பரமக்குடி ஐந்துமுனை சந்திப்பு பகுதி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண அப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2013 ஆகஸ்ட் 21-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
தற்போது மேம்பாலப் பணிகள் முடிவடைந்து, பாலத்தின் இருபுறமும் அணுகுசாலை, வாறுகால் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. இம்மாத இறுதிக்குள் பாலத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா திறக்க உள்ளார். இதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் ஆய்வு செய்தார்.
அவருடன் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது அணுகுசாலை பகுதியில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை மாற்றியமைப்பது, சாலையில் இடையூறாக உள்ள மின் கம்பங்களை மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஆட்சியரிடம் புகார்: இதற்கிடையே ஆட்சியரிடம் சிலர் அளித்த மனுவில், மேம்பாலப் பணி முழுமை பெறவில்லை. தற்போதுள்ள நிலையில் பாலத்தை திறந்து வைத்தால் பரமக்குடி நகர் காவல் நிலையம், நீதிமன்ற வளாகம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இத்திட்டம் முழுமை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் திட்டமிட்டபடி பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.