நெல் விளைச்சல் பாதிப்பு: நிவாரணம் வழங்க திமுக கோரிக்கை
கமுதி, முதுகுளத்தூர், கடலாடி தாலுகாக்களில் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு விரைந்து நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்று தி.முக. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சனிக்கிழமை தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி செயலர் ஆப்பனூர் கே.என். குருசாமி தெரிவித்தது:
இந்த ஆண்டு பருவ மழை, போதுமான அளவு பெய்யாததால், கண்மாய்களில் தண்ணீர் பெருகவில்லை. இதனால் வயல்களுக்கு கண்மாய் தண்ணீரைப் பாய்ச்சி நெல் விவசாயம் செய்யும் சூழ்நிலை இல்லாமற் போனது. இதற்கிடையே பெய்த குறைந்த அளவு மழையை நம்பி விவசாயிகள், நெல் விவசாயம் செய்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி போதுமான பருவ மழை பெய்யாததால், நெல் பயிர்கள் கருகின. இதனால் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் ஆகிய தாலுகாக்களில் வெறும் வைக்கோலையே விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். இதன் காரணமாக விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே அதற்குரிய இழப்பீட்டு நிவாரண தொகையையும், இந்த ஆண்டிற்குரிய பயிர் இன்சூரன்ஸ் தொகையையும் வழங்க வேண்டும். இதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.