தேவர் ஜெயந்தி விழா: “பாரா மோட்டரிங்’ மூலம் கண்காணிப்பு இந்தியாவிலேயே முதன்முறையாக முதுகுளத்தூரில் பயன்பாடு
முதுகுளத்தூர் : இந்தியாவிலேயே முதன்முறையாக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில், “பாரா மோட்டரிங்’ மூலம் வானில் பறந்து, தேவர் ஜெயந்தி விழாவிற்கு வருவோர் கண்காணிக்கப்பட உள்ளனர். தேவர் ஜெயந்தி விழாவையொட்டி, முதுகுளத்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ரகசிய கூட்டம் போடுவோர், காட்டுப்பாதை வழியாக கூட்டமாக பசும்பொன்னிற்கு செல்வது குறித்து, போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதனால் இந்தியாவிலேயே முதன்முறையாக, முதுகுளத்தூரில் “பாரா மோட்டரிங்’ இயந்திரம் மூலம் வானில் பறந்தபடி வீடியோ, போட்டோ எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் 18 லிட்டர் எரிபொருள் நிரப்பப்பட்டு, வானில் 10 ஆயிரம் அடி உயரம் வரை, தொடர்ந்து 3 மணி நேரம் பறந்து கண்காணிக்க முடியும்.
சென்னை ஏரோ ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் கிளப் செயலரும், “பாரா மோட்டரிங்’ பைலட்டுமான மணிகண்ணன் கூறியதாவது: அமெரிக்காவின் புளோரிடா போலீஸ் துறையில், கண்காணிப்பு பணிக்காக “பாரா மோட்டாரிங்’ பயன்படுத்தபட்டு வருகிறது. இது, இந்தியாவிலேயே முதன்முறையாக முதுகுளத்தூரில் தான் பயன்படுத்தப்பட உள்ளது. சேவை அடிப்படையில் போலீசாருக்கு உதவவே வந்துள்ளோம், என்றார்.
பாக்ஸ் மேட்டர்
“பாரா மோட்டாரிங்,’ இத்தாலி இறக்குமதி. மதிப்பு 5 லட்ச ரூபாய், இதில் பயன்படுத்தபடும் இறக்கையின் மதிப்பு ரூ.1.8 லட்சம். பாராசூட் பலூன் 2 லட்ச ரூபாய்.
“பாராமோட்டாரிங்’ “பவர்டு “பாரா கிளைடிங்’ முறையில் இயக்கப்படுகிறது.
ஒரே நேரத்தில் போட்டோ, வீடியோக்களை எடுத்து, உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்களை அனுப்பும் வசதி உண்டு.
இரவிலும் துல்லியமாக போட்டோ, வீடியோ எடுக்கும் வசதி கொண்டது.
புனேயில் பயிற்சி மேற்கொண்ட பைலட் மணிகண்ணன், கப்பற்படை, போலீசாருக்கு, இந்த இயந்திரத்தை இயக்க இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார்.