“தினமலர்’ செய்தி எதிரொலி : ஒன்றிய அலுவலகம் சீரமைப்பு
முதுகுளத்தூர் : “தினமலர்’ செய்தி எதிரொலியால் முதுகுளத்தூரில் சேதமடைந்த ஒன்றிய அலுவலக கட்டடம் சீரமைக்கப்படுகிறது. முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலக கட்டடம் 2008 ல், 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டது.
இந்த அலுவலக கட்டடத்தின் கதவுகள், நிலைகள், ஜன்னல்கள் இரும்பால் அமைக்கபட்டது. கட்டடத்தின் சுவர்களில் ஏற்பட்ட விரிசல், நிலைகளோடு கதவுகளும் சேதமடைந்துள்ளது. இதனால் அலுவலக பதிவேடுகளை பராமரிக்கும் பணியாளர்கள் “பீரோ’க்களில் பத்திரபடுத்தும் கூடுதல் நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதுமட்டுமில்லாமல், அலுவலகத்திலுள்ள கம்யூட்டர், பிரிண்டர்கள் உட்பட பல பொருட்கள் மாயமாகும் அவலம் ஏற்பட்டுள்ளது குறித்து, “தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து ஒன்றிய பொதுநிதியிலிருந்து, சேதமடைந்த அலுவலக கட்டடத்தின் சுவர்கள், நிலை கதவுகள் சீரமைக்கபடுவதோடு, அலுவலக வளாகத்திற்குள் சிமென்ட் ரோடு, நடைபாதைக்காக பேவர் பிளாக் கற்கள் அமைக்கவும் திட்டமிடபட்டுள்ளது.