காவிரி குழாய் உடைப்பால் கிராமங்களில் குடிநீர் சப்ளை நிறுத்தம் 15 நாட்களாக மக்கள் அவதி
முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகேயுள்ள கிராமங்களில் 15 நாட்களாக காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். முதுகுளத்தூர் அருகே கீழச்சாக்குளம், மேலச்சாக்குளம், கடமங்குளம், ஏனாதி, கிடாத்திருக்கை, சோனைப்பிரியான் கோட்டை, கொண்டுலாவி, சித்திரங்குடி, கூவர்கூட்டம் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு கடந்த 15 நாட்களாக காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. ஏற்கனவே இப்பகுதி மக்களுக்கு நிலத்தடி நீர் கிடைப்பதில் சிக்கல் உள்ளது.
நீண்டகாலமாக தண்ணீர் இன்றி தவித்த இக்கிராம மக்களுக்கு விமோச்சனம் அளிக்கும் வகையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் சப்ளை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நீண்டகாலமாக குடிநீர் விலைக்கு வாங்கி பயன்படுத்தி வந்த இப்பகுதி மக்கள் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ஓரளவிற்கு ஆறுதல் அடைந்தனர்.
ஆனால் ராட்சத குழாய்களில் அடிக்கடி ஏற்படும் உடைப்பு காரணமாக குடிநீர் சப்ளையில் பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது 15 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யப்படாததால் இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வழியில்லாமல் இப்பகுதி மக்கள் உவர்ப்பு தண்ணீரை குடிப்பதற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். கீழச்சாக்குளம், ஏனாதி, மேலச்சாக்குளம் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தொலைதுாரங்களுக்கு வாகனங்களில் சென்று வழியில் கிடைக்கும் தண்ணீரை குடங்களில் கொண்டு வந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் காலவிரயமும், பொருள் விரயமும், உடலளவில் சிரமமும் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
உவர்ப்பு தண்ணீரையும், சுத்திகரிக்கப்படாத தண்ணீரையும் இப்பகுதி மக்கள் தற்போது பயன்படுத்தி வருவதால் பல்வேறு குடும்பங்களில் உள்ளவர்கள் வயிற்று போக்கு நோயால் அவதிப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தண்ணீர் கிடைப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து சாக்குளத்தை சேர்ந்த மணி கூறியதாவது: காவிரி கூட்டு குடிநீரினை அதிகாரிகள் இப்பகுதிக்கு முறையாக சப்ளை செய்வதில்லை. என்ன காரணம் என தெரியாமலேயே கடந்த 15 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகிறோம். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு நினைவூட்டிய பின்பும் அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து குடிநீர் வாரிய அலுவலர் ஒருவர் கூறுகையில், சோனை பிரியான் கோட்டை அருகே உள்ள காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்யாமல் அப்பகுதி அதிகாரிகள் காலதாமதப்படுத்தி வருகின்றனர். இதனால் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சரிசெய்யப்பட்ட பின்புதான் தண்ணீர் சப்ளை செய்ய முடியும், என்றார்.