கண்மாய் சீரமைப்புப் பணி ஆய்வு
முதுகுளத்தூர் அருகே கண்மாய் சீரமைப்புப் பணியினை அமைச்சர் மணிகண்டன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 14 கண்மாய்களை குடிமராமத்து பணி செய்வதற்காக அரசு ரூ.1 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. இதில் முதுகுளத்தூர் தொகுதியில் கடலாடி ஒன்றியத்தில் 6 கண்மாய்கள், கமுதியில் 7 கண்மாய்கள், முதுகுளத்தூரில் ஒன்று என 14 கண்மாய்கள் சீரமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் கீழ், முதுகுளத்தூர் அருகே அரப்போது கிராம கண்மாயை ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கு.மணிகண்டன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் நடராஜன், மாவட்ட அதிமுக செயலர் எம்.ஏ முனியசாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ராணுவ வீரர் மனைவியுடன் சந்திப்பு: புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த திருப்பாண்டி(33) என்ற ராணுவ வீரர் காஷ்மீரில் சமீபத்தில் நடைபெற்ற பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார்.
திருப்பாண்டியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாததால் திங்கள்கிழமை புனவாசல் வந்த அமைச்சர் கு.மணிகண்டன் ராணுவ வீரரின் மனைவி கனகவள்ளியிடம் நலம் விசாரித்தார். அப்போது, தனக்கு அரசுப் பணி கோரி அமைச்சரிடம் கனகவள்ளி மனு அளித்தார். விரைவில் அரசு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.