கடைகளை அகற்ற எதிர்ப்பு: சாலை மறியலுக்கு முயற்சி
முதுகுளத்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலுக்கு முயன்றனர்.
முதுகுளத்தூர் சரவணப் பொய்கை ஊரணியின் கிழக்கில் மீன்கடைகள் உள்ளன. ஆக்கிரமிப்பில் உள்ளதாகக் கூறி அதை அகற்றுவதற்கு பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கந்தசாமிபுரம், காமராஜர்புரம், பர்மா காலனி, உழவன்தோப்பு காலனி, மீனாட்சிபுரம் காலனி, பெரியார் நகர், தேவேந்திரநகர் காலனி மக்கள், பேரூராட்சி செயல் அலுவலரிடம் முறையிட்டனர்.
பின்பு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் ரவீந்திரநாதன் தெரிவித்தார். அதன் பின் தேரிருவேலி விலக்கு ரோட்டில் பஸ்மறியல் செய்ய முயன்றனர். இன்ஸ்பெக்டர் சதீஷ், எஸ்.ஐ. சரவணன் ஆகியோர் பொதுமக்களிடத்தில் பேச்சு வார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.