வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 14 வகையான ஆவணங்களைப் பயன்படுத்தலாம்
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், மக்களவைத் தேர்தலுக்கு 14 வகையான ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான எல்.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி:
மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவின்போது, வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். அத்தகைய அடையாள அட்டை எடுத்துச் செல்ல இயலாதவர்கள், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, வங்கி அல்லது தபால் நிலையம் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய பாஸ் புத்தகம், பான்கார்டு, ஆதார் அட்டை, தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் பதிவு செய்து பெறப்பட்ட ஸ்மார்ட் கார்டு, தேசிய ஊரக வேலைஉறுதித் திட்ட பணி அட்டை, தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு ஆகியவற்றை அடையாள ஆவணமாக எடுத்துச் செல்லலாம். ஏப்.24 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றார் ஆட்சியர்.