ஊழியர்கள் பற்றாக்குறை பயனாளிகள் ஏமாற்றம்
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில், ஊழியர்கள் பற்றாக்குறையால், கோரிக்கைகளுடன் வரும் பயனாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் அவலம் தொடர்கிறது.முதுகுளத்தூர் சுற்றியுள்ள 267 கிராமங்களிலுள்ள, ரேஷன் கார்டுதாரர்கள் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம், புதிய கார்டு வேண்டி விண்ணப்பித்து வருகின்றனர்.
முதுகுளத்தூருக்கு வரும் வட்ட வழங்கல் அலுவலர், ஊழியர்கள், சில மாதங்களிலேயே இடமாறுதல் பெற்று செல்கின்றனர்.ஊழியர் பற்றாக்குறையால் புதிய கார்டு கோரி விண்ணப்பித்தவர்கள், ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
வீரம்பல் குமார் கூறுகையில், “”ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பதற்காக, வாரக்கணக்கில் அலைந்தும், அதிகாரிகள், ஊழியர்களை பார்க்க கூட முடியவில்லை. பள்ளிகளில் சேர்க்க முடியாமல், குழந்தைகளின் அடிப்படை கல்வி பாதிக்கிறது,” என்றார்.
வருவாய்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “”ஊழியர்கள் பற்றாக்குறை பல மாதங்களாக இருக்கிறது. தற்காலிக பணியாளர்கள் மூலமாக கோரிக்கைகள் நிறைவேற்றபட்டு வருகிறது,” என்றார்.