முதுகுளத்தூரில் 3 மாதங்களாக கிடப்பில் முதியோர் ஓய்வூதியம்
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் தாலுகாவில், மூன்று மாதங்களாக முதியோர் உதவி தொகை பட்டுவாடா நிறுத்தப்பட்டுள்ளது. பணம் கிடைக்காமல், பயனாளிகள் பரிதவித்துள்ளனர்.முதுகுளத்தூரிலுள்ள 267 கிராமங்களில், 17 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு, உழவர் பாதுகாப்பு, விதவை, கணவனால் கைவிடபட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட ஏழு திட்டங்களில், முதியோர் உதவித்தொகை வழங்கபட்டு வருகிறது.
உள்ளாட்சி தேர்தலை கணக்கில்கொண்டு, பதவிகளுக்கு ஆசைபடுவோர், கிராமங்களிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும், ஏதாவது ஒரு திட்டத்தில் முறைகேடான முறையில், முதியோர் உதவி தொகையை பெற்று கொடுத்துள்ளனர்.
இதனால் அரசு ஒதுக்கீட்டை விட அதிக நிதி தேவைப்படுகிறது. மாதந்தோறும் பயனாளிகளுக்கு குறிப்பிட்ட தேதிகளில், பணப்பட்டுவாடா செய்வது தாமதமாகியுள்ளது.
ரேஷன் கார்டுகளில் உள்ளவர்களின் வயது கணக்கெடுப்பின்படி, பயனாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதனால் முதுகுளத்தூர் தாலுகாவில் கடந்த மூன்று மாதங்களாக முதியோர் உதவித்தொகை பட்டுவாடா இல்லை. இதை மட்டுமே நம்பி வாழும் உண்மையான பயனாளிகள், நாள்களை கழிக்கவே திண்டாடி வருகின்றனர்.
நிதி ஒதுக்கீடு இல்லாததால், முதியோர் உதவி தொகை வழங்கும் திட்டத்தில், தகுதியான பயனாளிகள் விண்ணப்பித்தாலும், பயன்பெற நடவடிக்கை எடுக்காமல், மாதக்கணக்கில் சமூக பாதுகாப்பு திட்ட துறையினர் இழுத்தடிக்கின்றனர்.
முறைகேடான வழியில் முதியோர் உதவிதொகை பெறும் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு, தாலுகா தோறும் வருவாய்த்துறை தனிப்படையினரால், ஆய்வு செய்யபட்டு வருகிறது. இதில் முதுகுளத்தூர் தாலுகாவில், எட்டு கிராமங்களில் ஆய்வு நடத்தப்படவுள்ளது.
முதுகுளத்தூர் சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரி ஒருவர் கூறும்போது: மூன்று மாதங்களாக,நிதி வரவில்லை. வந்தவுடன், பட்டுவாடா செய்யப்படும், என்றார்.