உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்
இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானம் அளிப்பதில் தமிழகம் முதல் மாநிலகமாகத் திகழ்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்துக்களில் இந்தியாவில் 2013-ம் ஆண்டு 1,18,533 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட 67,757 சாலை விபத்துகளில் சிக்கி 16,175 பேர் இறந்துள்ளனர். மற்ற மாநிலத்தை காட்டிலும் தமிழ்நாட்டில் இறப்பு சதவிகிதம் அதிகம்.
இவ்வாறு சாலை விபத்துக்கள் மற்றும் உடல் நலக் கோளாறுகள் காரணமாக மூளைச்சாவு அடைபவர்களின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்படுவது தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
அந்த வகையில், தமிழகத்தில் 2008ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் மூளைச்சாவு உடல் மாற்று சிகிச்சை திட்டத்தின் படி, இதுவரை 418 பேரது உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டுள்ளன. அதில் 768 சிறுநீரகங்கள், 640 கண்கள், 380 கல்லீரல், 28 நுரையீரல்கள், 66 இதயம் என ஆக மொத்தம் 1,242 முக்கியமான உறுப்புகள் இவர்களிடமிருந்து தானமாக பெறப்பட்டுள்ளது. 452 இதயத்தின் வால்வுகளும், ஒருவரின் தோலும் தானமாக பெறப்பட்டுள்ளது.
இதில் சென்னையில் மட்டும் 348 பேரின் உடல் உறுப்புகளை தானமாகப் பெறப்பட்டுள்ளது. இதில் 611 சிறுநீரகங்கள், 378 கல்லீரல்கள், 66 இதயங்கள், 28 நுரையீரல்கள் அடங்கும். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மட்டும் 75 பேரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து 113 சிறுநீரகங்கள், 4 இதயங்கள் பெறப்பட்டுள்ளன.
கடந்த 2008-ம் ஆண்டு பள்ளி மாணவன் ஹிதேந்திரன் சாலை விபத்தில் மூளைச்சாவடைந்தார். அவரது பெற்றோர், ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளை தானமாக அளித்தனர். இந்த சம்பவத்துக்குப் பிறகு தமிழகத்தில் உடல் உறுப்புகள் தானம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து சென்னையில் ஒரு நாள் என்ற தமிழ் திரைப்படம் வெளியாகியுள்ளது.