சித்த மருத்துவம் – எளிதில் கிடைக்கும் மூலிகை கைமருந்து

Vinkmag ad

மருத்துவர் (திருமதி) இஸட். செய்யது சுல்தான் பீவி. பி.எஸ்.எம்.எஸ்.

அரசு பதிவு பெற்ற சித்த மருத்துவர். தோப்புத்துறை

 

சித்த மருத்துவம் உணவே மருந்து. மருந்தே உணவு என்ற உயர் தத்துவத்தை கொண்டது. இந்த தத்துவத்தை அறிந்த மேலை நாடுகள் தற்போது சித்த மருத்துவத்தைப் பற்றி மேலும் ஆய்வுப் பணிகளை செய்து வருகிறார்கள். சிறப்பு மிக்க இந்த மருத்துவம் நோய்களுக்கு பின் விளைவுகள் இன்றி நிரந்தர தீர்வுகள் காண்பதைக் கண்டு மாற்று மருத்துவத் துறையில் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகள் கூட்டாக இணைந்து கடந்த ஆண்டு சென்னை தாம்பரத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தை தொடங்கி சித்த மருத்துவ ஆய்வுப் பணிகளை தொடர வழிவகுத்துள்ளார்கள்.

 

இன்று ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூட மூலிகை மருந்துகளை தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு கொடுத்து பரிந்துரை செய்கிறார்கள்.

 

நாம் அன்றாட வாழ்க்கை நடவடிக்கையில் எளிதில் கிடைக்கக் கூடிய மருத்துவ குணத்துடன் நோய் தீர்வு மூலிகையின் பயன்பாடுகளை பார்ப்போம்.

 

ஜாதிக்காய் தூக்கமின்மை போக்கும்…

மனிதனுக்கு முக்கியமான ஓய்வுகளில் தூக்கம் ஒரு இறைவனின் கொடை. தூக்கம் இன்மையால் நம்மில் பலர்படும் மனக்கஷ்டம் அதிகம். தூக்கமின்மை ஏற்படுகின்ற போது ஜாதிக்காயைக் கொடுத்தால் பக்க விளைவுகள் இன்றி பாதுகாப்பான உறக்கம் எழுப்பியாகச் செயல்படும். வாந்தி பேதியில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் தண்ணீர் தாகம் அதிகளவில் இருக்கும். இதற்கு ஜாதிக்காயை தண்ணீரில் ஊற வைத்து, அந்த நீரை பருகினால் தாகம் தணியும். இருமல், ஒற்றைத்தலைவலி, வயிற்று வலி மற்றும் பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்றுவலி இருப்பவர்கள் ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு மற்றும் சித்திர மூலவேர் போன்றவைகளை அளவாக எடுத்து பொடியாக செய்து குறிப்பிட அளவு சாப்பிட்டால் குணமாகும். பேதி ஏற்பட்டு ஓய்வெடுக்கும் போது ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்ய ஜாதிக்காயைப் பொடி செய்து தண்ணீரில் கலந்து அருந்தி வரலாம்.

 

வாய்துர்நாற்றத்தைப் போக்கும் கொத்தமல்லி

வீடுகளில் சமையல் கூடத்தில் முக்கிய இடம் பிடித்திருக்கும் கொத்தமல்லி விதையை வாயில் போட்டு மென்று வந்தால் வாய் துர்நாற்றத்தை போக்கும். அத்துடன் பசியைத் தூண்டி வயிற்றில் உள்ள வாயுவை நீக்கும். கொத்தமல்லி இலையில் வைட்டமின் ஏ சத்து அதிகளவில் உள்ளதால் தினமும் இதை பயன்படுத்தினால் மாலைக்கண் போன்ற நோய்கள் வராமல் பாதுகாப்பு பெறலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று உபாதைகள் தீர கொத்தமல்லி விதையை வறுத்து பொடி செய்து கொடுக்கலாம். கொத்தமல்லி பொடியை தினமும் உபயோகித்தால் இருதயம் வலிமை பெறும். உடலுக்கு வன்மையும், ஆண்மையும் அதிகரிக்கும்.

 

கொத்தமல்லி விதை மிக எளிதாக கிடைக்கக் கூடியதால் தினமும் பயன்படுத்தி ஆரோக்கியத்தைப் பேணி வரலாம். யுனானி மருத்துவர்கள் இதை ஊறல் குடி நீராகச் செய்து பிரசவித்த பெண்கள் உடல் வலிமை பெறக் கொடுப்பார்கள்.

 

வயிற்று பிரச்சனை வரவிடாமல் தடுக்கும் சீரகம்…

சீர்+அகம்= சீரகம் அகம் – வயிற்றைச் சீர் செய்வதாலேயே இப்பெயர் பெற்றது. சீரகத்தை மணத்திற்காகவும், செரிமானத்திற்காகவும் உணவில் சேர்ப்பது ஒவ்வொரு வீட்டிலும் வழக்கம். வெந்நீரில் சீரகத்தை போட்டு சிறிது நேரத்திற்கு பின்பு அருந்துவது வழக்கம். பித்த சம்பந்தமான நோய்களைத் தீர்ப்பதில் இது சிறந்து விளங்குகிறது. மேலும் வயிறு, சம்பந்தமான நோய்களிலும் இதை அதிகம் உபயோகப்படுத்துகிறார்கள். சீரகம் மூலம் உடல் வெப்பம் குறையும். வயிற்று வலி, ஈரல் நோய், கல்லடைப்பு, இரத்த போக்கு, இளைப்பு, தொண்டைவரட்சி, மூக்கு நீர் பாய்தல் மற்றும் வாத நோய்களை விலக்கும். உடலுக்கு வலிமையைத் தந்து கண்களுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். பித்தத்தினால் ஏற்படும் வயிறு பிரச்சனைகளைப் போக்கி பசியை உண்டாக்கி உணவை நன்கு செரிக்கச் செய்யும் சக்தி கொண்டது.

 

குழந்தை வயிற்று கிருமியை அழிக்கும் திப்பிலி …

திப்பிலியையும், திப்பிலி மூலத்தையும் நன்கு பொடி செய்து குறிப்பிட்டளவில் குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றில் உள்ள கிருமிகள் மறைந்து போகும். திப்பிலி மூலம், சுக்கு இரண்டையும் சம அளவில் எடுத்து பொடி செய்து கடுகு எண்ணையுடன் கலந்து காய்ச்சி தடவினால் இடுப்பு வலி, மூட்டு வலி போன்றவையிலிருந்து நிவாரணம் பெறலாம். அத்துடன் திப்பிலி, சுக்கு, மிளகு திப்பிலி வேர், சீரகம், ஏலம், வாய் விடங்கம் மற்றும் கடுக்காய் இவைகளை இளவறுப்பாக வறுத்து நன்கு பொடி செய்துகொண்டு அத்துடன் சர்க்கரை பாகு காய்ச்சி அதில் தேன் கலந்து சிறிய அளவில் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இருமல், இரைப்பு நாவறட்சி மற்றும் தலைச்சுற்றல் போன்றவை அடியோடு நீங்கும்.

 

மாதவிலக்கு நோய் நீங்க மற்றும் கூந்தல் செழித்து வளர உதவும் கற்றாழை …

கற்றாழை உடலைத் தேற்றி உரமாக்குவதுடன் பெண்களுக்கு மாதவிலக்கு, சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகிறது. உடம்பில் அடிபட்ட வீக்கங்கள் இருப்பின் இதன் சாற்றை சூடு செய்து பூசலாம். கற்றாழைச் சோற்றை எடுத்து எண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டிய பின்னர் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நின்று கூந்தல் நன்கு செழிப்புடன் வளரும். கற்றாழைச் சாற்றுடன் சிறிது அபினீ கலந்து தலையில் தேய்த்தால் தலைவலி குணமாகும்.

 

வயிற்றுப் பூச்சி ஒழிக்க ஆடாதொடை ..

ஆடாதொடை இலை 8 முதல் 10 வரை எடுத்து சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும். சிறிது தேன் கூட்டி பாத்திரத்தில் வைத்து சுட வைக்கவும் மணம் வந்தவுடன் நசுக்கிய அதிமதுரம் 2 கிராம், திப்பிலி 1 கிராம், தாளிசபத்திரி அரை கிராம், சித்திரத்தை கால் கிராம் போன்றவற்றை இட்டு 2 லிட்டர் தண்ணீரை அதில் கலந்து கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை இரண்டு முறை குடித்தால் வாயு, பித்தப்பிரச்சனைகள் நீங்கும். வாத தோஷம், வயிற்று நோய், வாந்தி, விக்கல், சூலை, அண்ட வாயு இவைகளை போக்கும். வயிற்றுப்பூச்சிகள் தொல்லை இருந்தால் ஆடாதொடை இலையுடன் தூதுவளை, கண்டக்கத்திரி இவைகளின் இலைகளை சேர்த்து மேற்கண்ட முறைப்படி கஷாயம் செய்து கொடுக்கலாம்.

 

நெஞ்சு எரிச்சலை நீக்கும் இம்பூறல் மூலிகை …

இந்த இலை வேருடன் 20 பங்கு வரை தண்ணீர் சேர்ந்து குடி நீரிட்டு நச்சுப் பாம்புக்கடி, மிருகங்களின் கடி போன்றவற்றால் உண்டாகும் புண்களை கழுவப் பயன்படுத்தலாம். இருமல், இரைப்பு, இளைப்புக்கு 30 மில்லி முதல் 60 மில்லி வரை உள்மருந்தாய் அருந்தலாம். இதன் இலையை இடித்து பிழிந்து சாறு எடுத்து பாலும் சர்க்கரையும் சேர்த்து அருந்தினால் நெஞ்சு எரிச்சல் நீங்கும். இலையை நிழலில் உலர்த்தி நன்றாகப் பொடித்து அரிசி மாவுடன் சேர்த்துக் களியாக்கி கிண்டிச் சாப்பிட்டால் ஆஸ்துமா நோய்க்கு நல்ல பலன் கிடைக்கும்.

 

பசியைத் தூண்டும் இலவங்க மூலிகை

இலவங்கம் (கிராம்பு) அன்றாடம் சமையலுக்குப் பயன்படுவது. இது சமையலுக்கு சுவை ஊட்டுவதோடு மணமும் தருகிறது. இந்த செடியின் மலராத மொட்டுக்களைப் பறித்து உலர்த்தினால் வருவதே கிராம்பு என்ற இலவங்கம். இலவங்கத்திற்கு வயிற்றில் உள்ள வாயுவை அகற்றி பசியைத் தூண்டக்கூடிய சக்தி அதிகம் உண்டு.

 

கர்ப்பிணிகளின் ரத்தப்போக்கை நீக்கும் அதிமதுரம்

கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் ரத்தப்போக்கு நிற்பதற்கு அதிமதுர வேரையும், சீரகத்தையும் 15 கிராம் அளவில் சமமாக எடுத்து, 350 மில்லி தண்ணீரை எட்டில் ஒன்றாக வற்றக் காய்ச்சி இருவேளை 3 அல்லது 4 நாட்கள் அருந்தி வந்தால் ரத்தப்போக்கு நிற்கும்.

 

மார்புச் சளியை நீக்கும் தூதுவளை

தூதுவளை இலையினால் நெஞ்சில் உள்ள சளி நீங்கும். பூவினால் ஆண்மை பெருகும். காய், வாதம், பித்தத்தை போக்கும். பழம் நீண்ட நாட்கள் மார்புக்குள் தங்கி இருந்து கெட்டியாக இறுகிப்போன சளியைப் போக்கும்.

 

இதுபோன்ற பலவகையான கை மருத்துவ முறைகளை சித்தமருத்துவம் தெளிவாக உலகத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. மக்கள் அதை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் பிரச்சனைகளை மறைவின்றி எடுத்து சென்றால் நிச்சயம் தீர்வு கிடைக்கும்.

 

இந்திய மருத்துவத்தில் சித்த மருத்துவம் ஒரு நிலையை அடைந்து விட்டது. எந்த வித எதிர் விளைவுகளும் இல்லாத சித்த மருத்துவத்தின் சிறப்பை உலகெங்கும் பரவ அரசு வழிவகுக்க வேண்டும். அத்துடன் அபூர்வமான மூலிகைகளைப் பாதுகாக்க வேண்டும். இந்திய மருத்துவம் உலகிலேயே அனைத்து மருத்துவ முறைகளிலேயே சிறப்பானது என உலக மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலை விரைவில் வருவது நிச்சயம். இந்திய மருத்துவம் பற்றிய சிறப்பை அரசு தன் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் மக்களிடம் எடுத்து சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளை முடுக்கி விட வேண்டும்.

News

Read Previous

பெண் கல்வியும் சமுதாய முன்னேற்றமும்

Read Next

பார், உலகே ! நீ சாட்சி !

Leave a Reply

Your email address will not be published.