உயர் ரத்த அழுத்த நோயாளிகளே…
உயர் ரத்த அழுத்த நோயாளிகள் எப்போதும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது அவசியம். ஏனெனில் ரத்த அழுத்தம் இயல்பானதைவிட மிகவும் அதிகரிக்கும் நிலையில் மூளையில் உள்ள ரத்தக் குழாய்களின் சுவர் வீக்கம் அடைந்து (“அன்யூரிஸம்’) வெடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த நிலையில் மூளைக்குள் ரத்தம் உறைதல் அல்லது ரத்தப் போக்கு ஏற்படும்.
இத்தகைய பாதிப்பு ஏற்படும்போது தீவிர பக்கவாதம் ஏற்படும்; இவ்வாறு பாதிப்பு ஏற்படும் நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சை அல்லாத “ஸ்டென்ட் ரீட்ரெய்வர்’ என்ற சாதனம் மூலம் ரத்தம் உறைதலை அகற்றும் நவீன சிகிச்சை முறை சென்னையில் உள்ள மிக முக்கிய மருத்துவமனைகளில் உள்ளது. இத்தகைய நவீன சிகிச்சையை “எண்டோ வாஸ்குலர்’ (உள்நோக்கு ரத்தநாள சிகிச்சை) நிபுணர்கள் மட்டுமே செய்ய முடியும்.
மூளையின் ரத்தக் குழாய் சுவர் வீக்கம் (“அன்யூரிஸம்’) அடைந்து, ரத்தக் கசிவு ஏற்படும் நிலையில் நோயின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப தீவிர தலைவலி, வாந்தி, நினைவிழத்தல், பக்கவாதம் ஆகியவை ஏற்படும்.
எனினும், இதுபற்றிய பயங்கள் இன்றி, உடலை சீராக வைத்து, முறையான உணவுப் பழக்கத்தை கடைபிடித்தால் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம்.