24 மணிநேர தொலைபேசி 104 மருத்துவ சேவை : முதல்வர் துவக்கினார்
24 மணிநேர தொலைபேசி 104 மருத்துவ சேவையினை தமிழக முதல்வர் ஜெயலலிதா கோடநாடு முகாம் அலுவலகத்தில் துவக்கி வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள், தாய் சேய் நலம் பற்றிய தகவல்கள், ரத்ததானம், கண்தானம் பற்றிய தகவல்கள், தொற்று மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய தகவல்கள், ஊட்டச்சத்து குறித்த தகவல்கள், முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள வசதிகள், குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் நிலையங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 24 மணிநேர தொலைபேசி ‘104’ மருத்துவ சேவையினை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
பெண்கள், குழந்தைகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் பற்றிய விவரங்களைக் கணினி மூலம் பதிவு செய்வதற்காக கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஏற்படும் காலவிரயத்தினைக் குறைத்திடும் வகையிலும், கிராம சுகாதார செவிலியர்களுக்கு 9,397 விலையில்லா மடிக்கணினிகள் வழங்குவதன் அடையாளமாக 7 கிராம சுகாதார செவிலியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார் முதல்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.