பயணங்கள்
பயணங்கள்
அன்னையின் மடியில் ஆரம்பப் பயணம் தந்தையின் கரம்பிடித்து தளிர்நடைப் பயணம் மூன்று வயதில் துவங்கும் கல்விப் பயணம் .ஆசிரியர் துணையுடன் அறிவுப் பயணம் . பள்ளிப்பருவம் முடிந்து கல்லூரிப் பயணம் எதிர்காலத்தை அதுவே நிர்ணயிக்கும் பயணம் அடுத்து துவங்கிடும் அலுவல் பயணம் .பணம் சம்பாதிக்கும் சாகசப் பயணம் .இருபத்தைந்திற்கு மேல் இல்லறப் பயணம் .துணையுடன் துவங்கிடும் நல்லறப் பயணம். .வருங்காலத்திற்கு வசதிகள் சேர்க்கவும் , அறுபது கடந்ததும் அமைதியாய் வாழவும் வியர்வை சிந்தியும், விவேகமாய் சிந்தித்தும் உழைப்பை நல்கி உயர்ந்திடும் பயணம் . சந்ததி பெருக்கிடும் சந்தோஷப பயணம் . அவர்களை வளர்க்கும் ஆனந்தப் பயணம். பிள்ளைகளுக்கு இல்லறம் அமைத்திடும் பயணம் .
பேரக்குழந்தைகளுடன் பேரின்பப் பயணம் . பெற்றோர் , உற்றோர் என உறவுகளுடன் பயணம் நண்பர்கள் துணையுடன் நல்லதோர் பயணம் . பணி ஓய்வு பெறும்வரை உழைத்திடும் பயணம் . இனிமையாய் ஓய்வினை கழித்திடும் பயணம். பிறந்தவர் பயணம் இறப்பினில் முடியும் . பாதையில் ஆயிரம் பயணியர் வருவார் பாதியில் பலரும் பாதை மாறுவார் . இறுதிவரையில் உடன் வருவார் எவருளர் . முதலும் தெரியாது , முடிவும் தெரியாது . இடையினில் சிலகால வாழ்க்கைப் பயணத்தில் இனியது பேசி, இனியன செய்து இயன்ற வரையில் உதவிகள் செய்து இந்தப் பயணம் முடிவுற்றாலும் , இறந்தும் வாழ்வோம் பலரது மனதில்
அன்புடன்
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்