நகரத்தார் விருந்து
நகரத்தார் விருந்து பற்றி கண்ணதாசன் எழுதியது.
நகரத்தார் விஷேச வீட்டு விருந்து ….!
“மாப்பிள்ளை பார்த்தாலும் மருந்து குடிச்சாலும்
பூப்பிள்ளை பிறந்தாலும் புதுமனைதான் புகுந்தாலும்
பேசி முடிச்சாலும் புதுமை நடந்தாலும்
சடங்கு கழிச்சாலும் சாந்திமணம் என்றாலும்
ஐயாவீட்டுப் பங்காளி அனைவருமே வருகின்ற
மெய்யாத்தா படைப்பினிலும் மேலான குலதெய்வக்
கொரட்டிப் பூசையிலும் கொப்பாத்தா தேரினிலும்
அடைக்காத்தா படைப்பினிலும் அழகழகாய் விருந்துவைப்பார்
அச்சமின்றி விருந்துவைக்க ஆர்வமுள்ள காரணத்தால்
எச்சிவாளி பெரிதாக எல்லோரும் வைத்துள்ளோம்
அமெரிக்க நடேசன் அரிமளம் பொன்னைய்யா
நெடுங்குடி சின்னைய்யா சிறுவயச் சுப்பையா
மீசைக் கருப்பையா மேலாவட்டை முத்தய்யா
செட்டுச் சமையலுக்கு சீரான மேஸ்திரிகள்
கொக்காய்ப் பறந்தாலும் கொட்டிக் கொடுக்காத
உக்கிரண வள்ளியக்கா ஒழுங்கான நிர்வாகம்
வெத்திலை பாக்கென்றும் வேட்டிக்குச் சோப்பென்றும்
கத்தினாலும் அளவோடு கச்சிதமாயக் கொடுத்திடுவார்
பந்தி விசாரணைக்கு பாகனேரிப் பானாழானா
முந்திவந்து அனைத்தையுமே மோந்துமோந்து ருசிபார்க்க
புலவு சாதத்தைப் போட்டிடுவான் நடேசன்
வளவுவரை பிரியாணி வாசம்தான் கமகமக்கும்
சிப்பாய்கள் அணிவகுத்துச் செல்வதைப்போல் பந்தியிலே
தப்பாமல் கடகாவாளி தானேந்தி வந்திடுவார்
சீப்புச் சட்டியிலே சீரகச் சம்பாவின்
பூப்போன்ற சாதத்தைப் புதுஇட்டு வட்டியினால்
வெள்ளையன் இலையினிலே விறுவிறுப்பாய்ப் போட்டிடுவார்
செல்லாயி பருப்பூற்ற சிகப்பியுமே நெய்யூற்ற
என்ன கறியென்றே எண்ணுகிற வேளையிலே
அன்னக் கிளிபோல அடுத்தவளும் பறந்தோட
பக்கவடாக் குழம்பு பக்கத்திலே வந்துநிற்கத்
தக்கபடி மோர்க்குழம்பு தகதகக்கும் உடல்காட்ட
அன்னியர்கள் யாரும் அறியாத சிறப்புடைய
தண்ணிக் குழம்பதுவும் தக்காளி சூப்பதுவும்
சட்டியிலே ஊற்றிவைத்த கட்டித் தயிரையுமே
விட்டு முடித்தவுடன் விறுவிறுப்பாய்ப் பந்தியிலே
தண்ணீரைக் குடுக்கிற சின்னப் பயல்கூட
ஒண்ணுக்கும் லாயக்கில்லை; உதவாக் கரையென்று
பலபடியாய்ச் சத்தம் பயங்கரமாய் வந்தாலும்
பழப்பாயா சத்துடனே பந்தியினை முடித்திடுவார்
பந்தியிலே விருந்துவைக்கும் பண்பாட்டைத் தனியாகச்
சிந்தித்தால் நாம்தானே சீரோங்கி நிற்கின்றோம்