விரும்பித் திறத்தல் முறையாமோ !

Vinkmag ad
விரும்பித் திறத்தல் முறையாமோ  !

மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா  …… மெல்பேண் …. ஆஸ்திரேலியா

மீண்டும் தொடங்கும் மிடுக்குடனே  

                   மீண்டும் திறந்தன மதுக்கடைகள் 
                   தீண்டும் கொரனோ தன்நிலையை 
                   ஊன்றத் தொடங்க நினைக்கிறதே 
                   மாண்டு மடியும் மனிதவுயிர் 
                   மனதைக் கலக்கி இருக்கையிலே 
                   மீண்டும் மதுவை விற்கும்கடை
                   விரும்பித் திறத்தல் முறையாமோ  ! 
 
                   திறந்த கடைகள் திசைகுலைக்கும்
                   உறங்கும் வெறியை உலுப்பிவிடும் 
                   மறந்த கோரம் நின்றாடும்
                   மனித மாண்பு மழுங்கடியும் 
                   குடும்பப் பெண்கள் நிலைகுலைவார்
                   குழந்தைகள் கண்ணீர் கடலமிழ்வார் 
                   நலங்கள் எல்லாம் தானகலும்
                   நாட்டில் கடைகள் திறந்ததனால்  ! 
 
                   நாட்டில் திறக்கப் பலவிருக்க
                   நலத்தை அழிக்கும் மதுக்கடைகள் 
                   திறந்தால் சிறைகள் சிரித்துவிடும்
                   விருந்தாய் பலபேர் வருவரென 
                   மருந்தே காணா இருக்கையிலே
                   மதுவைக் கையில் ஏந்துவதா
                   மதுவை விற்கும் கடையனைத்தும்
                   மக்கள் வாழ்வைக் குலைத்துவிடும்  ! 
 
                   பாயில்படுக்க வைக்கும் மதுக்
                   கடைகள் திறந்தால் பலவழியும்
                   பாயும் கொரனோ இதைப்பார்த்து
                   பரிகாசமாகக் கேலி செய்யும் 
                   தாயும் பிள்ளையும் சிரித்துநிற்கும்
                   சரித்திரம் இப்போ நடக்கிறது
                   மீண்டும் கடைகள் திறந்ததனால்
                   வீழ்வார் பலபேர் படுகுழியில்  ! 
 
                   

News

Read Previous

தரணி ஆளும் தமிழ்

Read Next

ஒலிப்புத்தகம்

Leave a Reply

Your email address will not be published.