தரணி ஆளும் தமிழ்

Vinkmag ad

தரணி ஆளும் தமிழ்

உலகறியும் மொழிகளிலே தமிழ் மொழிபோல்
உயர்தனிச்  செம்மொழி வேறில்லை !
இலக்கண இலக்கிய வரலாற்றோடு
இலங்கும் தமிழுக்கிணை ஏதுமில்லை !
பொதிகை மலைச் சாரலாய்ப்  புவிமீது
பார்போற்ற வாழும் மொழித் தமிழாகும் !
வாழ்வியலாம் வள்ளுவத்தில் நிலைபெற்று
வான் போற்றும் தமிழெங்கள் அமுதாகும் !
சங்கம் வளர்த்த மாமதுரை வீதியெங்கும்
அங்கமாய்த் தமிழ்த்தூண்கள் அரணாகும் !
மூவேந்தர் புகழ் பாடிப்  பாரெங்கும் 
முத்தமிழே இனி எங்கள் உரமாகும் !
வரிவடிவத் தமிழின் தொன்மைக்குச் சான்றாகி 
வைகையாற்றுத் தமிழர் நாகரிகமாய்க்  கீழடி !
உலகின் முதல் மொழித் தமிழென்று 
உணர்த்துகின்ற அகழாய்வே எங்கள் தாய்மடி !
ஈராயிரம் ஆண்டுக்கு முற்பட்ட திருக்குறளே
இணையிலா உலகப் பொதுமறை !
ஓராயிரம் ஆண்டுப் பழமை உரைக்கின்ற
ஆத்திச்சூடி நாமறிந்த திருமறை !
பிராமி வடிவம் தமிழுக்கு மூலமென
மாங்குளத்துக்  கல்வெட்டு விளக்கியது !
இன்றளவும் ஒலிவடிவம் வரிவடிவம் காத்து
குன்றமென நின்றே தமிழ் துலங்கியது !
தமிழைப்போல் இனிதான மொழி வேறில்லையென 
தரணிக்கு எடுத்துரைத்தான் நம் காகவி !
தமிழெங்கள் உயிருக்கு நேரென்று நெஞ்சுயர்த்தி
அமுதமொழித் தமிழ்தான் என்றான் புரட்சிக்கவி !
உலகெங்கும் கால்பதித்த தமிழரின் மேன்மை
பலகாலம் பறைசாற்றும் தமிழின் மாண்பை !
தன்னிலிருந்து மலர்ந்த சொல் தம்இழ்  
தரணி ஆளும் தமிழுக்கு மகுடமாகும் !
கவிச்சுடர் கா..கல்யாணசுந்தரம் , சென்னை  600100 
9443259288

News

Read Previous

கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு

Read Next

விரும்பித் திறத்தல் முறையாமோ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *