தரணி ஆளும் தமிழ்
தரணி ஆளும் தமிழ் உலகறியும் மொழிகளிலே தமிழ் மொழிபோல் உயர்தனிச் செம்மொழி வேறில்லை ! இலக்கண இலக்கிய வரலாற்றோடு இலங்கும் தமிழுக்கிணை ஏதுமில்லை ! பொதிகை மலைச் சாரலாய்ப் புவிமீது பார்போற்ற வாழும் மொழித் தமிழாகும் ! வாழ்வியலாம் வள்ளுவத்தில் நிலைபெற்று வான் போற்றும் தமிழெங்கள் அமுதாகும் ! சங்கம் வளர்த்த மாமதுரை வீதியெங்கும் அங்கமாய்த் தமிழ்த்தூண்கள் அரணாகும் ! மூவேந்தர் புகழ் பாடிப் பாரெங்கும் முத்தமிழே இனி எங்கள் உரமாகும் ! வரிவடிவத் தமிழின் தொன்மைக்குச் சான்றாகி வைகையாற்றுத் தமிழர் நாகரிகமாய்க் கீழடி ! உலகின் முதல் மொழித் தமிழென்று உணர்த்துகின்ற அகழாய்வே எங்கள் தாய்மடி ! ஈராயிரம் ஆண்டுக்கு முற்பட்ட திருக்குறளே இணையிலா உலகப் பொதுமறை ! ஓராயிரம் ஆண்டுப் பழமை உரைக்கின்ற ஆத்திச்சூடி நாமறிந்த திருமறை ! பிராமி வடிவம் தமிழுக்கு மூலமென மாங்குளத்துக் கல்வெட்டு விளக்கியது ! இன்றளவும் ஒலிவடிவம் வரிவடிவம் காத்து குன்றமென நின்றே தமிழ் துலங்கியது ! தமிழைப்போல் இனிதான மொழி வேறில்லையென தரணிக்கு எடுத்துரைத்தான் நம் மகாகவி ! தமிழெங்கள் உயிருக்கு நேரென்று நெஞ்சுயர்த்தி அமுதமொழித் தமிழ்தான் என்றான் புரட்சிக்கவி ! உலகெங்கும் கால்பதித்த தமிழரின் மேன்மை பலகாலம் பறைசாற்றும் தமிழின் மாண்பை ! தன்னிலிருந்து மலர்ந்த சொல் தம்இழ் தரணி ஆளும் தமிழுக்கு மகுடமாகும் ! கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் , சென்னை 600100 9443259288