நயம்படப் பேசு!
நயம்படப் பேசு!
******
இனியசொல் பேசு! நெஞ்சில்
இன்பமாய்ப் பூக்கள் பூக்கும்!
துணிவுடன் பேசு! வாழ்வில்
துன்பங்கள் ஓடிப் போகும்!
கனிதரும் சுவையைப் போல
கனிவுடன் அன்பாய்ப் பேச
நனிமிகு கோபம் எல்லாம்
நைந்துமே போகும் தூசாய்!
நல்லன எண்ணிப் பேசு
நன்மையைச் செய்யப் பேசு
அல்லன தவிர்த்துப் பேசு
ஆளுமை வளர்க்கப் பேசு!
முள்ளெனத் தைக்கும் சொல்லை
முற்றிலும் களைந்து பேசு!
உள்ளமும் மகிழும் வண்ணம்
உண்மையை உணர்ந்து பேசு!
நன்றியை நினைந்து பேசு
நயம்பட நாளும் பேசு!
மன்றிலே நின்று பேசு
மனமுமே திறந்து பேசு!
தென்றலைப் போல பேசு
தெளிந்துநற் கருத்தைப் பேசு
வென்றிடும் வழியைப் பேசு
வேற்றுமை அகலப் பேசு!
பயந்துமே பேசு வோரை
பயன்படா பதரே என்பர்!
தயங்கியே பேசு வோர்கள்
தலைமைக்குத் தகுதி இல்லார்!
பயன்படப் பேசு வோரை
பாருமே புகழ்ந்து பேசும்!
நயம்படப் பேசு வோரை
நட்புகள் வந்து கூடும்!
(படைப்பு : பாவலர் தண்முகநம்பி)