துணிந்து நில் தமிழா!
துணிந்து நில் தமிழா!
==============================
“ஸ்டெர்லைட்”
இதற்கு எதிராய்
தராசுகள் தந்த தீர்ப்பு..
ஒரு 185 பக்க கீதை!
செல்லரித்த கீதைகளின்
சொல்லரித்துக் கிடந்த அநியாயங்களை
அதிரடியாய் அடித்து நொறுக்கிய தீர்ப்பு இது.
எதற்கெடுத்தாலும்
குருஷேத்திரங்கள் என்று
பாஞ்சஜன்யம் முழக்குபவர்களே!
மக்களையெல்லாம்
அஞ்துப்பூச்சிகளாக்கி
பாச்சா உருண்டைகாளால் அழிப்பது போல்
துடைத்து விட்டு
லாபவெறியின் துரியோதன கார்ப்பரேட்டுகளை
வளர்ப்பதற்குத் தானே
உங்கள் வேதாந்த சாஸ்திரங்கள்
அம்புக்கூடுகளை அடுக்கி வைத்திருக்கின்றன.
இந்த தீர்ப்பு
உங்கள் கோணா மாணா கீதைகளை யெல்லாம்
நேராக்கி இருக்கிறது.
மனித வளமும் இயற்கை வளமும்
இழைந்ததே பொருளாதார வளர்ச்சி.
ஒரு சில கம்பெனிகள் மட்டுமே
பங்குகளில் புடைத்துக்கொண்டு வந்து
மக்களை நசுக்கி விடமுடியாது
என்பதற்கு
ஒரு நம்பிக்கை வடிவமே
இந்த தீர்ப்பு.
தமிழ் நாட்டின் இயற்கை செழித்த
பஞ்ச பூதங்கள்
நஞ்சு பூதங்களாக மாறினாலும்
பரவாயில்லை
என்று நம் நியாய பாரதத்தை
ஒரு அரக்கு மாளிகையில்
கொளுத்திவிடப்பார்க்கும்
அந்த தந்திர நாடகத்தையெல்லாம்
தவிடு பொடியாக்க வந்த
தீர்ப்பு இது.
தமிழனே!
நீ சிலிர்த்தெழ வேண்டிய வேளை இது.
உன் முதுகுக்குப்பின்னாலேயே
உன் மண்ணையும் மொழியையும்
பாலைவனங்களாக்கி விடும்
ஒரு அச்சத்தின் “பேரிடர்”
துரத்துகின்ற அவர்கள் அரசியலின்
அச்சாணியையே
முறித்து விடுகின்ற
முடிவோடு எழுந்து நில்!
துணிந்து நில் தமிழா!