தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
இசுலாமிய மார்க்கத்தில் ஒருதூதர்-யார்க்கும்
இணையில்லா இப்ராகிம் எனுந்தூதர்!
விசுவாசம் மிகக்கொண்டு வாழ்ந்தவர்-இறை
வழிபாட்டை உயிராகக் கொண்டவர்!
அசுரத்தன நம்ரூது ஆட்சியிலும் – சிறுதும்!
அச்சமின்றி இறைகொள்கை உரைத்தவர்.
இசுமாயில் எனுந்நல்ல வாரிசை – அந்த
இறையருளால் பெற்றின்பம் கண்டவர்!
இல்லாது பிறந்திட்ட பிள்ளையை – கண்ணை
இமைகாப்பது போல்காத்த முல்லையை!
அல்லாவின் ஆசியால் நாள்தோறும் – நல்
அறிவோடும் அருளோடும் வளர்ந்துவர!
பொல்லாத இரவொன்றில் இப்ராகிம்-நெஞ்சைப்
பொசுக்கிடும் கனவொன்றை கண்டாரே!
கல்லான பிள்ளையைதன் கையாலே
கொல்வதுபோல் கனவொன்று கண்டாரே!
வருத்தத்துடன் தான்கண்ட கனவதனை -மன
வலியுடனே பிள்ளைக்கு எடுத்துரைக்க!
திருவிளக்குப் பெற்றிட்ட தீபமன்றோ -இறை
தீர்ப்பாக எண்ணியே பணிந்துநிற்க!
அருமைமிகு மகனையே பலிகொடுக்க -சற்றும்
அஞ்சாத இப்ராகிம் பக்திக்கு!
பெருமைமிகு அல்லாதன் அருளாலே-பிள்ளையின்
பேருயிரை காத்தானே நிறைவாக!
நிகழ்விதற்கு நினைவாக ஆடொன்றை -மன
நெகிழ்வோடு பலியிடவே வேண்டுமென்று!
பகர்ந்திட்ட இறைவாக்கை பணிந்தேற்று-இன்றும்
பக்தியுடன் நிறைவேற்றப் படுகிறது!
மகனையே பலிகொடுக்க துணிந்திட்ட -அந்த
மாசற்ற இப்ராகிம் தியாகத்தை!
அகமாற போற்றிடும் ஒருநாளாம் – அதுவே
அருமைமிகு பக்ரீதெனும் திருநாளாம்
கவிதையாக்கம் கவிஞர்.இரா.புனிதன்✍