தாய்மை !
தாய்மை !
…மு. பஷீர்…மஸ்கட்
சூழும் அலைகடல் முழுதும்
’மை’யாக்கிப்
புனைந்தாலும்
‘தாய்மை’ எனும் உன் கவிதை
புகழ்பாடத் தேர்ந்திடுமோ !
முந்தானை அமுதத்தில்
உயிரேற்றினாய் !
உலகம் சீர்போற்ற
உரமேற்றினாய் !
சிசுவாயிருக்கையிலே
செந்தமிழ்ப்
பாலூட்டினாய் !
நீ
செவிமடலில் எனக்கு
அறிவுப் பட்டம் தந்த
பல்கலைக் கழகம் !
ஒரு உடலில்
இரண்டு இதயம்
இயங்காதென யார் சொன்னது ?1
உன் வாழ்கை
இரட்டை உயிர்கள் பயணிக்கும்
ஒற்றைத் தண்டவாள
இரயில் பயணம் !
தளராத வீரம் உன்னிடம்
தனிமையில் நீ போராடும்
பிள்ளைப் பேற்றில் !
தாயாகிப் போனதால்தான்
உன்முன்னே
பாருலகே சேயாகிப் போனது !
நீ ஆயுதம் கொண்டு
அடித்தாலும் அன்பின்
மென்மையால் அது
வீசும்’ காற்றாகவே வலிக்கிறது !
வார்த்தைகள் கொண்டு
கடிந்தாலும் உன் அகத்தின்
வாழ்த்தொலியே
இசைக்கிறது !
தாயே நீ
தலையில்
குட்டிய தழும்புகளில்
தலைமைப் பண்புகளின்
பூச்சரம் !
நீ நடைபயிலச்
செய்த கால்கள் இன்றும்
நல்ல பாதை நோக்கியே
பயணிக்கின்றன !
உன் தாய்மைப் பண்புக்கு
வாழ்த்துக் கவிதை தர
தமிழே கொஞ்சம்
வெட்கப்படுகிறது ;
அவளும் ‘தாய்’த்தமிழ்
என்பதாலா !
புகழ்ச்சி என்ற ஒன்றை
நிவிர் இருவரும்
வேண்டாம் என்பதாலா !
எங்கோ ஒலிக்கும்
நீ பெறாத குழந்தையின்
அழுகுரலுக்கே
உன் அமுதப்பால்
சுரக்கிறதே !
அதுதான் தாய்மையின்
எல்லைகளற்ற
தியாகப் பண்பா !
தாய்மையே !
என் போன்ற மனிதர்களையும்
நீ சுமக்கிறாய் என்ற
ஓரே காரணத்தினால்தானோ
மண் மாதாவும் உலகை
சுமக்கிறாள் !
முத்தாய்ப்பாய்ச் சொல்கிறேன் !
நீ பதித்த அன்பின்
முத்தங்களால் தான்
இன்றும்
மானுடமே வாழ்கிறது !
…மு. பஷீர்…மஸ்கட்