ஜூன் 24……. கவியரசரின் பிறந்த நாள்….
சிறுகூடல் பட்டி
சிறந்தது உன் பிறப்பால்….
காகங்களும் கரையத் தயங்கிய வானத்தில்
மேகத்தின் கரம்பிடித்து பறந்திடக் கற்றவன்….
மாமிசக் கூடங்களில் மலர்களை விற்றவன்
மார்கழிக் குளிரிலும் தீப்பொறி செய்தவன்…..
வாயசைத்த ஊமைகளுக்கு
வாழ்வளித்த உன் வரிகள்
வாழ்கிறது நீ செத்த பின்னும்……..
அதனால்தான் சொன்னாய்…
“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை..
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை”
உன்னால்தான் முடியும்
காமத்தை சொல்லாமல்
காதலால் கலவி செய்ய!
மதுவை தான் குடித்து
மற்றவர்க்கு போதை தர!
கன்னித் தமிழ்த் தாயினின்றும்
உன்னை மட்டும் பிரித்து விட்டால்
பாடல் என்று எதுவும் இல்லை
பன்னீர்ப் பூவும் மணப்ப தில்லை….
நற்றமிழ் அறிஞனே உந்தன்
வெற்றிடத்தை அடைப்பதற்கு
காற்றுக்கு கூட வலிமையில்லை…
கண்ணதாசனை நிரப்பிடும் வலிமை
கவிஞனாய்ப் பிறந்த எவனுக்கு மில்லை….
பரவசம்……….கவிமகன் காதர்……………
—
அவரின் முகநூல் முகவரி:https://www.facebook. com/dubaikader?fref=ts