சுமை
சங்கீத சாரலாக முதலில் தோன்றிய முத்தான சொல்லோ அக்து…
அவளின் இடையில் அமர்ந்து தனி ராஜ்ஜியம் படைத்தோம் அன்று..
அவள் கையால் பிசைந்த வெற்று சாதமும் ருசியின் உச்சத்தை எட்டியதே..
அவள் கைகோர்த்து நடக்கும்போது கால்கள் ஒருபோதும் வலிக்கவில்லையே..
அவளோடு அம்மன்கோவில் செல்கையின் அம்மன் அருகில் தான் நிற்கிறேன் என்று நான் உணரவில்லையே…
இரு எட்டு கடந்து பெண்மை கோலம் கொண்டு அவளை பார்க்கையில் எங்கிருந்தோ வந்ததடி சிறு வெட்கம்…
ஒஹோ இது தான் இனி பெண்மை என உணருகையில் அவள் பட்ட கஸ்டங்களும் விளங்கியதே..
மறு மாத உதிரத்தின் வலி அடிவயிற்றை சுருக்கையில் அம்மா என்ற ஒற்றை வார்த்தைக்குள் இத்தனை வலியா என்று அறிந்தேனடி அன்று..
ஒற்றை மாத உதிரத்திலே உயிர்வேண்டாம் எனும் அளவிற்கு வலி கொண்டேனே….உன் பத்துமாத சுமையிலே என் உயிர் வேண்டும் என்று தவமிருந்தவளே..
காலங்கள் கடந்து செல்ல செல்ல கண்ணீர் மிளிர்ந்த வாழ்க்கை சுருக்கம் புரியவைத்தாயே…
ஆண்பிள்ளை வேண்டும் என்றுரைப்பாய் உதட்டில்..தான் பெற்ற வலியை பெண்பிள்ளை சுமக்க கூடாது என்ற காரணத்தினாலோ..
அன்றறியேன் நான்…
ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தாலும் சுமைகளையும் சுகங்களையும் சுமப்பவள் பெண்ணே..
அவன் படைப்பில்…சிலருக்கு சுமை மட்டுமே சொந்தமாகிறது…
சோ.ஞா.பிரசன்னா
தஞ்சாவூர்