சவர்கலால் நேரு பிறந்த தினக் கவிதை
சவர்கலால் நேரு பிறந்த தினக் கவிதை – நவ 14.
இந்திய நாட்டினை எழுச்சியுற செய்திட
இணையிலா தியாகத்தால் இருளினை போக்கியாவர்
சிந்தனையில் சிற்பியாய் சிறுநரி கூட்டத்தை
சிதறியே ஓட்டிட செல்வாக்கை காட்டியவர்!
வந்தவர் வாழ்ந்திட வாழ்பவர் நலிவதோ
வடித்திடும் கண்ணீரை வற்றிட செய்தவர்!
மந்திரப் புன்னகை மகாத்மா தலைமையில்
மாபெரும் இயக்கத்தை மாறாமல் காத்தவர்!
ஆசிய ஜோதியென அகிலமே பாராட்ட
அமைதியின் பாதையில் அன்பினை விதைத்தவர்!
நேசிக்கும் நாட்டினில் நிலைத்திட சுதந்திரம்
நேர்மையின் வழியில் நாளுமே உழைத்தவர்!
காசியும் குமரியும் கலந்திடும் ஒற்றுமை
காணவே நாட்டினில் கடமையைச் செய்தவர்!
வீசியே பறந்திடும் விடுதலைக் கொடியினை
விண்ணுயிர கண்டிட வெற்றியைக் கொய்தவர்!
பஞ்சசீல கோட்பாடு பாரினில் ஒலித்திட
பாதுகாப்பு உறவினை பலருக்கும் தந்தவர்!
விஞ்சிடும் தொழில்துறை வளம்பெற செய்திட
வியூகங்கள் கூறியே விடையினை கண்டவர்!
பஞ்சமே இல்லாத பாரதம் உருவாக்கி
பாங்குடன் மனதிலே பாராட்ட நின்றவர்!
நெஞ்சத்தில் வைத்திடும் நேசமிகு ரோஜாவாய்
நேர்மையின் வாழ்வுதனை நாட்டுக்கே தந்தவர்!
-ப.கண்ணன்சேகர் 9894976159.