காதலர் தினம்
காதலர் தினம்
————————
காத்திருங்கள் பிள்ளைகளே,
காதலிக்கலாம் பின்னால்.
புது உறவைத்தேடி,
சதிவலையில் சிக்கும்,
பதின்பருவ பிள்ளைகளே,
கேள்விகளால் புரிவோம்,
காதலர் தினத்தை.
இனம்புரியா உணர்வுகளால்
இளம்வயதில் வருவதா காதல்?
நான் யார்?
நீ யார்? –
தெரியாமலேயே வருவதா காதல்?
எல்லாம் தெரிந்த பெற்றோருக்கு,
நான் எதிரி ஆவேனா?
ஒன்றும் அறியாத நான்,
அவர்களை மீறுவேனா?
எல்லை மீறி படிதாண்டி,
தொல்லையை விலைக்கு வாங்குவேனா?
சாதிக்க பிறந்தவனா,
இல்லை,
காதலிக்க போகிறவனா?
சினிமா பார்த்து மயங்கி,
அவசரப்படுகிறேனா?
புரிதல் இல்லாமலே,
பிரிவுகளாய் முடிகிறதே –
அதற்கு பெயர், காதலா?
படிக்கின்ற வயதில்
வருவது தான் காதலா?
துடிப்புடன் படிப்பை
முடிக்கும் முன்னே,
வருவதா காதல்?
பதின்பருவம் படிப்பதற்கே!
படிக்க வேண்டிய வயதில்,
தம்பதியாய் வாழ ஆசைப்படாதீர்கள்!
புரிந்து வாழ்ந்து வரும்
என்னைப் பெற்றவர்கள்,
சரிந்து போகவா
காதலர் தினம்?
பெத்தமனம் பித்து,
பிள்ளைமனம் கல்லு –
நிரூபிக்கவா காதலர் தினம்?
பெற்றவர்களை நம்புங்கள்.
நீங்களும் கரை சேரலாம்.
ஆக வேண்டிய வயதில்,
துணை சேர்வீர்கள்.
காதல் செய்யலாம்,
காத்திருங்கள் –
கட்டிய மனைவியோடு –
கரம் பிடிக்கும் கணவனோடு.
ஓட்டம் எடுக்கும் வாழ்வில்,
தடம் புரளாதீர்கள்.
மாற்றம் காணுங்கள்.
மனசை பறிகொடுக்காதீர்கள்,
பதின்பருவ பிள்ளைகளே,
கவனமாய் இருங்கள்.
காதலர் தினம் உங்களுக்கு அல்ல.
அன்புடன்,
ஜ. ஜாஹிர் உசேன்.