கவர்ச்சிகள் உதவிட வாரா

Vinkmag ad

கண்ணிலே தெரியும் ஈர்ப்புடைச் சாந்தம்
             கவர்ந்திடும் பொழுதினில் காந்தம்
வெண்ணிலா கீழே இறங்கியே வந்து
              வெளிச்சமே காட்டிடும் முகமும்
பெண்ணிடம் கண்டு மென்னுளம் சொல்லும்
              ” பிழையிவை கண்டதெல் லாமே
மண்ணிலே பிறந்த சதையிலே இல்லை
              மகிழ்வெலா முயிரின் ஆக்கமே.”
 
இறைவனி னாற்றல் கண்டுநான் வியந்தேன்
                        இச்சதை யாதெனத் தெரிந்தேன்
உறைந்துள ஆன்மா காட்டிடும் சக்தி
                 உணர்ச்சியைக் கூட்டிடும் யுக்தி
மறைந்திடும் நேரம் தெளிந்திடும் வாய்மை
                   மனந்தரும் மோகமும் பொய்மை
நிறைந்திடும் சுகமே கண்டவ ரில்லை
                       நிம்மதி மெய்யுல கெல்லை.
 
 
பொய்யுடல் தோலில் விலகிடும் சாயம்
            பொழுதினில் மறைந்திடும் மாயம்
மெய்யுல கத்தின் சுவையினோ ராய்வு
                   மேனியிற் கண்டிட வாய்ப்பு
ஐயமில் மறுமைப் பேற்றினை யறிய
                     அனுமதித் தில்லறம் புரிக!
கையறு நிலையில் நின்றிடும் வேளை
                   கவர்ச்சிகள் உதவிட வாரா
 
 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்
 
http://www.kalaamkathir.blogspot.com/
 
விளம், மா, விளம், மா, விளம், விளம், மா வாய்பாட்டில் அமையும் எழுசீர் விருத்தம்

News

Read Previous

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுகுளத்தூர் (கிளை) உதயத்திற்காய்.. இதய வாழ்த்து !

Read Next

மூலிகை அறிமுகம் – ஜாதிக்காய்

Leave a Reply

Your email address will not be published.