கலைஞருக்கு வாழ்த்து!
கலைஞருக்கு வாழ்த்து!
உனது 70வது பிறந்த நாளுக்கு நான் எழுதிய கவிதையில் முதல்வரி மட்டுமே, எனக்கு நினைவில் நிற்கிறது!
முத்துவேல் அஞ்சுகம் பெற்ற
முத்துப்பரளே …..
என்பது அது!
நானொன்றும் முட்டாளல்ல;
நீ ஒன்றுமே செய்யவில்லை
என்று சொல்ல!
உன் வசீகரக் குரலுக்கு;
உன் காட்டாற்றுத் தமிழுக்கு;
உன் சீரிய திறமைக்கு;
நானும் அடிமையே!
ஆனால்,
என்ன நீ தமிழோடு
நின்று இருந்தால் இன்னும்
பல உச்சங்கள் தொட்டிருப்பாய்!
எந்த அரசியலை முன்னெடுத்தாயோ
அந்த அரசியலே உன்னைப்
பின்னுக்குத் தள்ளிவிட்டது!
உன் பாசத்தை வைத்தே
உன்னை வேட்டையாடி
விட்டனர்!
கிருஷ்ணனை விலக்கி விட்டு
அர்ஜுனனாக இருந்து
என்ன பயன்?
பாசத்தால் மோசம் போன
தலைவர்கள் பட்டியலில்
உனக்குத் தான் முதலிடம்!
உன்போல் உழைப்பதற்கு
உன்போல் வாழ்வில்
முப்பதுகளை கடப்பதற்கு
எந்த உடன்பிறப்பும்
இன்னும் பிறக்கவில்லை;
இனியும் பிறப்பதற்கில்லை!
வசீகர முகங்கொண்டு
வாணிப உத்திகொண்டு
அரசியலுக்கு வந்தோரிடையே
எழுத்தால் வந்தாய் நீ!
எழுந்து நின்றாய் நீ!
என்ன செய்ய!
பாழாய்ப் போன அரசியல்
உன் பாதையை மாற்றி
உன் உழைப்பையே
தின்று விட்டது!
உன்னை நான் எவ்வளவோ
காதலித்தவன் தான்!
உன்னோடு ஒரு நாளாவது
உன் செயலராகப் பணிபுரிந்து
உழைப்பை, உற்சாகத்தை, உரையை
நடையை, நற்றமிழைக் கற்க
எண்ணியிருந்த காலம் அது!
அப்படியே அக்காலத்தை
அசைபோட்டு இதோ
எனது நமஸ்காரங்களை
உனக்குச் சமர்ப்பிக்கிறேன்!
இன்னும் நூற்றாண்டுகள் கடந்து
நீ வாழ இறைவனை வேண்டுகிறேன்!
அன்புடன்
சுரேஜமீ
3-6-2018