கவிக்கோ
போட்டி….கவிக்கோ
———————————
ஒருநாள் ,எனக்கும் வானத்திற்கும் போட்டி நடந்தது.
நான் புன்கையை எடுத்து வைத்தேன்
அது வைகறையை எடுத்து வைத்தது.
நான் கண்ணீரை எடுத்து வைத்தேன்.
அது மழையை எடுத்து வைத்தது.
நான் வியர்வைத்துளிகளை
எடுத்து வைத்தேன்.
அது நட்சத்திரங்களை எடுத்து வைத்தது.
நான் கோபத்தை எடுத்து வைத்தேன்.
அது வெயிலை எடுத்து வைத்தது.
நான் காதலை எடுத்து வைத்தேன்.
அது நிலவை எடுத்து வைத்தது.
நான் எண்ணங்களை எடுத்து
வைத்தேன்.
அது மேகங்களை எடுத்து
வைத்தது.
நான் எழுத்தை எடுத்து வைத்தேன்.
அது மின்னலை எடுத்து
வைத்தது.
நான் பேச்சை எடுத்து வைத்தேன்
அது இடியை எடுத்து
வைத்தது.
நான் கவிதையை எடுத்து
வைத்தேன்.
அது வானவில்லை எடுத்து
வைத்தது.
நான் உறக்கத்தை எடுத்து
வைத்தேன்.
அது இருளை எடுத்து
வைத்தது.
நான் சந்தேகங்களை எடுத்து
வைத்தேன்.
அது கிரகணங்களை எடுத்து
வைத்தது.
நான் பெருமூச்சை எடுத்து
வைத்தேன்.
அது புயலை எடுத்து
வைத்தது.
இறுதியில் நான்
புதுப்புது இலட்சியங்களை
நோக்கி நடக்கும்
என் பாதங்களை எடுத்து
வைத்தேன்.
வானம் தோற்றது.
கவிக்கோ அப்துல் ரகுமான்.