கலைஞருக்கு என் கண்ணீர் அஞ்சலி !
கலைஞருக்கு என் கண்ணீர் அஞ்சலி !
‘உயிரினும் மேலான’ என்ற
உச்சரிப்பையே
உயிரினும் மேலாகக் கொண்டிருந்த
உன்னதத் தலைவனே ! – உன்
மேலான உயிர் இன்று
மேலே போனதென்ன ?
உன்னை
எதிர்த்தவரெல்லாம்
இல்லாமல் செய்த தலைவனே ..
இன்று
நீ எங்கு போய்விட்டாய் ?
ஓய்வறியாச் சூரியனாய்
ஒளிவீசினாயே !
இன்று ஏன்
அஸ்தமனம் ஆகிவிட்டாய் ?
சூரியனையே
சுடர்விடச்செய்த சூத்திரனே !
நீ ஏன் செயலிழந்து கிடக்கிறாய் ?
எம் மொழியைச்
செம்மொழியாக்கிய
செம்மலே ! – இன்று
நீ ஏன் மெளனம் காக்கிறாய் ?
உன்
வாய்மொழிக்குத் தானே
வாய்பிளந்து
காத்துக்கிடக்கிறது தமிழகம் !
வந்து ஒரு வார்த்தை பேசக்கூடாதா ?
முப்பால் கொடுத்த
முனிவனுக்கு
முக்கூடலில் சிலை வைத்தவனே !
இன்று நீ ஏன்
சிலையாகிவிட்டாய் ?
தமிழகத்தின்
தன்னிகரில்லாத் தலைவரே !
பெரியாரின் சீடனாய்ப்
பகுத்தறிவு வளர்த்தவரே !
உன்
உடன் பிறப்புகள்
உனக்காக காத்திருக்கிறார்கள் !
எழுந்து வா தலைவா !
எழுந்து வா தலைவா !
கனத்த இதயத்துடன் ..
கவிநேசன்