கடவுளின் சாட்சியாகவே எல்லாமும்…………

Vinkmag ad
கடவுளின் சாட்சியாகவே 
எல்லாமும்…………
எஸ் வி வேணுகோபாலன் 

மனித நாகரிகத்தை மண்கூடத் தின்று செரிக்காது !

கயவர்கள் தங்கள் வேட்டைக்கு

இம்முறை ஒரு குழந்தையைத் தேர்வு செய்கின்றனர்

கொஞ்சம் போதை மருந்து போதுமானதாயிருக்கிறது
அதல பாதாளத்தில் அந்தக் கண்மணியைக்
கொண்டு தள்ளுவதற்கு –

அப்புறமென்ன,
ஒரு சமூகத்திற்கே பாடம் கற்றுக் கொடுக்கத் துடிக்கும்
திமிரெடுத்த உறுப்புகளோடு

நூற்றாண்டுகளின் வன்முறையை

ஒட்டுமொத்தமாக ஏவுகின்றனர்
அந்தச் செல்லப் பசுங்கிளியின் மீது !

மின்னல் எதுவும் வெடிப்பதில்லை
மரங்கள் எதுவும் முறிந்து சாய்ந்துவிடுவதில்லை
அநியாயப் பாவிகள் எவரது
கண்களும் அவிந்து போவதுமில்லை –
உலகம் சுழன்று கொண்டிருக்கிறது
அதன் வழக்கமான நிதானத்தில்
அதன் வழக்கமான பரமோனத்தில்
அதன் வழக்கமான ஞானத் தெளிவில்!

எல்லாம் ஒரு கோயில் களத்தில் –

எல்லாம் ஒரு தெய்வத்தின் சந்நிதானத்தில் –

எல்லாக் கொடுமைகளும் எல்லா நாசங்களும்

எல்லா அக்கிரமங்களும் எல்லா அராஜகங்களும்

ஒரு கடவுளின் சாட்சியத்தோடு

அவரது மௌன ஒப்புதலோடு

நிறைவேற்றிய வெறியோடும் அடங்குவதில்லை

அவர்களது வேட்கை!

கசக்கி எறியப்பட்ட மலரின்

கடைசி துடிப்புகளையும்
ரசித்துப் பருகுகிற கூட்டம்
வீசியெறிந்துவிட்டு
வீடு திரும்புகிறது
வீர பராக்கிரமத்திற்கான
ஆரத்தி வரவேற்புக்கு!

நடுக்கத்தோடு கேட்கவோ
பதட்டத்தோடு பார்க்கவோ
அதிர்ச்சியில் உறையவோ
சொல்லப்படும் கதையல்ல
கதுவா இளங்குருத்தின் அவலம்!

வெறுப்பின் நெருப்பை
ஊதி ஊதி வளர்க்கும்
வாய்களுக்குப் போடவேண்டும் சூடு
அநியாயத்திற்கு எதிரான உள்ளக் கொதிப்போடு!
பாலியல் வன்மத்திற்கு எதிரான அறச்சீற்றத்தோடு!

News

Read Previous

பட்டுக்கோட்டையாரும் அம்பேத்காரும்

Read Next

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *