எழுபதாவது ஆண்டில் ஜமால் முகமது கல்லூரி..!
எழுபதாவது ஆண்டில்
ஜமால் முகமது கல்லூரி..!
~~~~~~~~
ஐம்பத்தி ஒன்றில் தோன்றி,
வெற்றிக்கொடி ஊன்றி,
தனிவழியில் தடம் பதித்த,
தென்னிந்தியாவின் அலிகாரே..
அகவை எழுபதோ உமக்கு…
உவகை எழுவதோ எமக்கு…
அறியாமை இருளகற்றிட,
அறிவொளியை மண்ணில்
பரப்பிட,கல்விச்சுடரை கையில்
கொடுத்து,ஜமாலியன்களை
உலகெங்கும் அனுப்பி,நீ ஆனந்தம் கொண்டாய்.பெருமிதம் கண்டாய்.
கந்தக பூமியின் வெப்பத்தில்,
உன்னகம் வந்து பயின்றதால்,
என்றும் அணையா தணலோடு,
மண்ணகம் எங்கும் பரவி,உன்
புகழ் பாடும் வானம்பாடிகள்,
உலகெங்கும் பல கோடிகள்.
மலைக்கோட்டை தந்திட்ட
கலைக்கோட்டையே,மாநகரின்
இதயத்தில்,நீ வீற்றிருப்பது
நகருக்கே பெருமை.நிகருக்கு நிகராய்,உனக்கு எதிராய்,
நின்றியங்கும் கல்விக்கூடங்கள்,
நானிலத்தில் வேறெங்கும் இல்லை
தென்னகம் போற்றும் கல்வி
மஹாலை தந்து,விண்ணகம்
சென்ற எந்தைகளாம்,ஜமால்
முஹம்மது சாகிபையும்,
காஜாமியான் ராவுத்தரையும்,
பூவுலகம் உள்ளவரை, ‘பா’வுலகம்
என்றும் போற்றிப்பாடிடும்…
மாணவச் செல்வங்களை,உளி
கொண்டு செதுக்கி,சிதையாத
சிற்பமாய் தந்திடும்,பேராசிரிய
சிற்பிகளை,சீராட்டி புகழ்வதோடு,
நம் நெஞ்சத்தின் கல்வெட்டில்,
பாராட்டிப் பதிவிடுவோம்..
வந்தமரும் பறவைகளுக்கு
இளங்கலை,முதுகலை என
சிறகுகளை தந்து, திக்கெட்டும்
பறந்திட ,வாய்ப்பினை தந்த
ஜமால் முகமது கல்லூரியெனும்
எங்கள் ஞான விருச்சமே.!.நீ
வான்புகழ் கொண்டு வாழ்த்திட
வல்லவனிடம் வேண்டுகிறோம்…
இங்ஙனம்,
வகுப்பறையில் நீ தந்த அறிவு அமுதத்தையும்,விடுதியின் உணவறையில் நீ தந்த அறுசுவை குஸ்காவையும் ,மறக்க இயலாத
முன்னாள் மாணவர்கள்..
*
ஆக்கம்:
கவிஞர் Avm.சிராஜுதீன்
கூத்தாநல்லூர்