உலக பெற்றோர் தினம்
உலக பெற்றோர் தினம்
ஆண்மைக்குச் சான்றாக குழந்தை பெற்றோர்
தாய்மைக்குச் சான்றாக குழந்தை பெற்றோர்
வாழ்விற்கோர் அர்த்தமென குழந்தை பெற்றோர்
வம்சம் தழைத்திட வாரிசைப் பெற்றோர் .
சிற்றின்ப ஆசையால் இருவர் கூடி
பேரின்பம் அடைந்திடும் நிலைதான் பெற்றோர்.
பெற்ற குழந்தைக்கு நல்லுணவு தந்து
உடை தந்து , உலக அறிவும் தந்து ,
நற்கல்வி தந்து , நற்பண்பும் தந்து
நல்ல நிலையில் அவரை ,நிலை நிறுத்தி
ஏணியாய் , தோணியாய் , சுமைதாங்கியாய்
துணைவனாய் , இறைவனாய் , வழிகாட்டியாய்
வாழ்க்கை முழுவதும் அவருக்கே செலவழித்து ,
ஒவ்வொரு நிலையிலும் ரசித்து , சிரித்து ,
புகழ்ந்து பெருமிதம் எய்தி மகிழ்ச்சியுறும்
புனித உறவு என்றும் பெற்றோர்தானே .
அத்தகைய பெற்றோரே பேறு பெற்றோர் .
அத்தகைய பெற்றோர் அமையப்பெற்ற
பிள்ளைகளும் வாழ்வில் பேறு பெற்றோர்.
பெற்றோரின் அன்பைப் புரிந்து கொண்டு
பெற்றோரின் தியாகங்களை நினைவில் கொண்டு
பெற்றோரைக் கடைசிவரை கண்கலங்காமல்
பெற்ற பிள்ளைகளைப்போல் பேணிக்காப்போம்
பெற்றகடன் அவர்கள் தீர்த்துவிட்டார்
பிள்ளைக்கடன் தீர்க்க உறுதிகொள்வோம்.
அன்புடன்
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்