அவரவர் உலகத்தில்…….
அவரவர் உலகத்தில்…….
அம்மா கிடக்கிறாள்
சடலமாக
சுற்றிச் சுற்றி வந்து
விளையாடிக் கொண்டிருக்கிறது குழந்தை
இப்படித்தான் கண் மூடி
விளையாட்டுக் காட்டுவாள் தாய்
உள்ளே ஒளிந்து கொண்டு
கண்டுபிடி கண்டுபிடி
என்று குரல் மட்டும் கொடுப்பாள் தாய்
பொய்கோபம் காட்டிக் கொண்டு
சேலையால் முகத்தை மூடிக் கொண்டு
எத்தனை பற்றி இழுத்தாலும்
உள்ளிருந்து சிரித்தபடி
முகம் காட்டாமல் ஏய்ப்பாள் தாய்
இப்போது
ரயில்வே பிளாட்பாரத்தில்
ஓர் ஓரத்தில்
எத்தனை கூப்பிட்டாலும்
எத்தனை பற்றி இழுத்தாலும்
எத்தனை நெத்தி நெத்தி அழைத்தாலும்
அப்படியே கிடக்கிறாள் தாய்
ஆனாலும் விளையாடியபடி இருக்கிறது
குழந்தை….
என்ன ஏதென்று தெரியாதபடி
தனது உலகத்தில் …
இந்த நாட்டு ஆட்சியாளர்கள்,
அதிகாரி வர்க்கத்தினர் ‘
நீதிமான்களும் கூட
அலட்டிக் கொள்ளாமல் இருக்கின்றனர்
அவரவர் உலகத்தில்….
எஸ் வி வேணுகோபாலன்